Wednesday, October 31, 2012

யார் அவன் ?


                                          

பெண்ணில்  அழகாய்க் கருவாகி
பென்னம் பெரிய தொன்றாகி
மண்ணில் வந்த மனிதர்கள்
மறைத்து வாழும் பொருளாகி
கண்ணில் எளிதில் தோன்றாமல்
கரத்தில்  கடிதில் சிக்காமல்
எண்ணில் அடங்கா மேகம்போல்
ஏகம் தன்னைச் செற்றிடுவான்

தேயும் நிலவைப் போலிருந்து
தளர்ந்தே பின் வளர்ந்திடுவான்
பாயும் வெள்ளம் போலாகி
பரந்து விரிந்து திரிந்திடுவான்
வீயும் எண்ணம் இல்லாமல்
வீரம் கொண்டே விளங்கிடுவான்
மாயும் வரையில் நச்சியதை
மறதி இலாது காத்திடுவான்

ஆசை என்னும் கடலினிலே
அல்லும் பகலும் முங்கிடுவான்
பூசை போலே மேலேறி
புவியில் நிதமும் தாவிடுவான்
தூசை வாரித் தலைமேலே
தூக்கிப் போடும் வேழம்போல்
மாசை மறுவை மட்டின்றி
மார்போ  டணைத்து மகிழ்ந்திடுவான்
இன்பம் வந்து சூழ்கணத்தில்
இசைக்கும் குழல்போல் மாறிடுவான்
துன்பம் ஆங்கு மேவிடவே
துவைக்குந் துணிபோல் ஆகிடுவான்
அன்பை அறனை அழித்தொழித்து
அற்பப் பதராய் அழிந்திடுவான்
பொன்னும் பொருளும் அள்ளிவந்து
போதா தென்றே வாழ்ந்திடுவான் 

பணியா திந்த உலகினிலே
பலவாய் வினைகள் செய்துவந்து
அணியா திருக்கும் அணிகலனாய்
அழகாய்  நம்மை அலங்கரித்து
தணியா தென்றும் தானிருந்து
தானாய் என்றும் செயல்பட்டு
பிணியாய் இனிதே உருமாறி
பிணைத்துக் கொல்லும் உள்ளமவன்

No comments:

Post a Comment