Saturday, March 31, 2012

இரவு

இரவே !!
நீண்டு படுத்திருக்கும்
கரிய அரவே !!

நீ எங்கிருந்து வருகிறாய் ?

பகலெனும் புற்றுக்குள்ளிருந்து
வருகிறாயா ?

ஊர் முழுதும்
ஊர்ந்து ஊர்ந்து
போகிறாயே !!

எங்கே ?

போகும் வழியில்
நீ உமிழும்
மாணிக்கம் தான்
மீன்களாய் சுடர்கின்றனவோ ?

ஆளரவம் இல்லாத
நேரத்தில் ஒரு
நீளரவம் போல்
வருகிறாயே !!

எனக்குத் தெரியும்
அதெதற்கு என்று ;

பாவம் - உனக்குப்
பசிக்கிறது ;

அசுரப் பசி ;

பேதாபேதமின்றி எல்லோரையும்
அப்படியே விழுங்குகிறாயே ?
ஏன் ?

புரிகிறது எனக்கு ;

பாம்புகள் எல்லாம்
விழுங்கித் தானே
உண்ண வேண்டும் ;

பூமியில் உள்ள
"நல்" பாம்பு கடிக்கும் ;
வானிலே உள்ள
"அல்" பாம்பு விழுங்கும் ;

நீ
எல்லாவற்றையும் விழுங்குகிறாய்
வெளிச்சம் தவிர ...

ம்ம்ம்....

உனக்கு அது
ஒவ்வாதோ ?

உண்மை தான் .....

வெளிச்சம் வந்தால்
நீ மறைந்து போகிறாய் ;
அழிந்து போவதில்லை ;

நெருப்போடு சேர்ந்த எதுவும்
நெருப்பாவது போல்
உன்னோடு சேர்ந்த எதுவும்
கருப்பாகி விடுகிறதே !!
கருப்பாகி உன்னில் ஒரு
உறுப்பாகி விடுகிறதே ;

இருட்டில் நடக்கையில்
குழியும் ஒன்று தான்
மூடியும் ஒன்று தான்
எறும்பும் ஒன்று தான்
பாம்பும் ஒன்று தான்
யானையும் ஒன்று தான்
பூனையும் ஒன்று தான்
அரசனும் ஒன்று தான்
ஆண்டியும் ஒன்று தான்...

எங்கும் கருப்பு , எதிலும் கருப்பு
அடடா என்ன விந்தை இது !!

இதை உணரவைத்த
இராவே !!
முற்றும் அறிந்த ஞானி நீ ;

ஞாயிறு ஒருப்பெருஞ்ஜோதி,
நீ கருப்பெருஞ்ஜோதி ;

ஆனால் ஒரு ஆச்சரியம்.....
இந்த ஜோதி
யாவரையும் குருடாக்கி விடுகிறதே !!

நீ வந்தால்
குன்றிமணி ஒளியின்றி
இரண்டடி முன்னால்
எடுத்து வைக்க ஏலுமா ?

உன்னைக் கண்டால்
எவர்க்கும் பயம் ;

பூமியில் உள்ள
கறுப்பினத்தைக் கண்டு மக்கள்
ஒடுக்குவர் ;

வானத்தில் உள்ள
கறுப்பினத்தைக் கண்டு மக்கள்
ஒடுங்குவர் ;

வெண்ணிற மேகமும் உன்னருகே
மைந்நிற மேகமாய்த் தெரிகிறதே ;

உனக்குள்ளும் ஒளி உண்டோ ?

பகலின் பல சத்தங்கள்
உனக்குள் அடங்கி விடுகிறதே !!

பல மொழிகள்
தெரிந்த மௌனி நீ ;

பகலுக்கு பகலவன் தேவை ;
உனக்கு நிலவு தேவையா ?
இல்லை ;

ஆரையும் சாரா அம்சமே
உன் சாராம்சம் ;

நீ திரளத் திரள
உலகம் சொக்குண்டு துயில்கிறதே ;

ஆதலால் ஒரு
மந்திரவாதி நீ ;

தேவன்
மனிதனைப் படைக்கையில்
உன்னையும் கேட்டுத்தான்
படைத்து முடித்தானோ ?

எது எப்படியோ...

என் கேள்விகள்
நீண்டு கொண்டே இருக்கும்
உன்னைப் போலவே !!

பதில் தேவையில்லை,
கேள்வி கேட்கும்
சந்தோஷமே போதும் ;

இரவே !! இப்போது
நான் விடை பெறுகிறேன் ;

மீண்டும் சந்திக்கிறேன்
உன்னைக் "கேள்விகளோடு" மட்டும் ;

Tuesday, March 20, 2012

என்னென்று சொல்வேன்

என்னென்று சொல்வேன்
அந்த அனுபவத்தை
என்னென்று சொல்வேன்..

எரிமலை திரட்டிய
தீக்குழம்பும்
பனிமலை உருட்டிய
பனிப்பந்தும்
கைகோர்த்து நடந்தால்
எப்படி இருக்கும்!!
அப்படியல்லவா இருந்தது
இல்லை.. இல்லை..

குற்றால அருவியின்
வீரியமும்
ஒற்றை மழைத்துளியின்
வாஞ்சையும்
ஒன்றோடொன்று பொருதினால்
எப்படி இருக்கும்!!
அப்படியல்லவா இருந்தது
இல்லை.. இல்லை..

நிலவற்ற வானத்தின்
ஏக்கமும்
மழைகொண்ட மேகத்தின்
கர்வமும்
ஒன்றையொன்று மணந்தால்
எப்படி இருக்கும்!!
அப்படியல்லவா இருந்தது
இல்லை.. இல்லை..

காட்டாற்று வெள்ளத்தின்
அவசரமும்
இரைதேடும் நாரையின்
நிதானமும்
சமரசம் செய்துகொண்டால்
எப்படி இருக்கும்!!
அப்படியல்லவா இருந்தது
இல்லை.. இல்லை..

கொடிபிரிந்த மலரின்
சோகமும்
தாய்கண்ட இளங்கன்றின்
உவகையும்
ஒருசேரத் தோன்றினால்
எப்படி இருக்கும்!!
அப்படியல்லவா இருந்தது
இல்லை.. இல்லை..

கண்ணெதிரில் நகையாடும்
மிருகத்தனமும்
ஆழ்மனதில் குடிகொண்ட
தெய்வாம்சமும்
ஒன்றுக்குள்ளே ஒன்றிருந்தால்
எப்படி இருக்கும்
அப்படியல்லவா இருந்தது
இல்லை.. இல்லை..

இல்லவே இல்லை
இன்னமும் இன்னமும்
அழகாகவும் நயமாகவும்
எப்படிச் சொல்வதென்று
தெரியவில்லை - நீ
எனக்குக் கொடுத்த
முத்தத்தை;