Sunday, October 21, 2012

247 - அ முதல் ஃ வரை


காலை எழுந்து பல்லினைத் துலக்கி
இன்றைய பொழுது இனிதாய்க் கழிய
"அ" வை வணங்கினேன் ஓர் அதிகாலைப் பொழுதில் (அ - கடவுள்)
அடுத்த நிமிடம் வீதியில் , "ஆ"  மா என்றது (ஆ- மாடு)
சரி என்று, நாளிதழ் எடுக்க வெளியே வந்தேன்
ஓர் அதிசயக் காட்சியைக் கண்டேன்
அப்போது இராத்திரி ஆடிய வேட்டையினாலோ என்னவோ 
"இ" ஒன்று மரக்கிளையில் தூங்கிக் கொண்டிருந்தது (இ - ஆந்தை)
அந்த "இ" யை  "ஈ" ஒன்று  மொய்க்கவே, அவ்வி சிலிர்த்து பறந்தது
உடனே, "உ" மேல் எய்த அவ்விடம் அகன்றேன் - பின் (உ - வியப்பு)
வீட்டினுள்ளே "ஊ" தயாராகிக் கொண்டிருக்க(ஊ - உணவு) 
காலங் காலையில் தொலைக்காட்சி போட்டேன்ஓர் அலைவரிசையில் எ குஞ்சுகளோடு சுற்றியது, மாற்றினேன்  (எ - கோழி)  
இன்னோர் அலைவரிசையில் "ஏ"வை ஒருவன் எய்து கொண்டிருந்தான்  ( ஏ - அம்பு )
அதையே கொஞ்ச நேரம் பார்த்தவாறு  
"ஐ" யைக் கலந்து குளம்பி குடித்தேன் - குடித்ததும் (ஐ - சக்கரை) 
மறுபடியும் அலைவரிசை மாற்றினேன்,  "ஒ" ஒன்று அகவியது (ஒ - மயில் )
திரும்பவும் மாற்றினேன் "ஓ" வென்று பாடிக்கொண்டிருந்தார்  விக்ரம் (ஓ - வியப்புக்குறி, நடிகர் விக்ரமின் ஓ போடு பாட்டு)
மீண்டும் மாற்றினேன் ஒரு "ஒள" சுற்றியது , பிறகு சற்றே கண்ணயன்றேன் (ஒள - பூமி, ஒரு அலைவரிசையின் குறியீடு  )

பிறகு, என் "க" வில் அயர்ச்சி நீங்க எழுந்து தயாரானேன்  (க - உடல் )
டிராக் உடையை முழுக்க உடுத்தி    
பூங் "கா" விற்கு வந்தேன் வன்நடை பயில (கா - சோலை)
  "கி" என்றது ஒரு கிளி - உடனே
  "கீ" என்றது இன்னொரு கிளி - போட்டிக்கு 
  "கு" என்றது ஒரு குயில் - போதாதென்று 
  "கூ" என்றது இன்னொரு குயில் - அதைக்கேட்டு 
  "கெ" என்று முதலில் குறிலிலும் பின்பு(கெக்கே என்ற குழந்தை அழுவதாய் ஒரு கற்பனை)
  "கே" என்று நெடிலிலும் மிழற்றியது ஒரு குழந்தை 
   உடனே அதைக் "கை" யால் தூக்கினாள் அதன் அம்மா 
  "கொ" வென்றது குழந்தை மறுபடியும் -  அம்மா 
   அதட்ட "கோ" என்று  பெரிதாக அழுது பின் அடங்கியது (கோ - இரங்கல் குறி)
   அதைப் பார்த்து இலேசாக புன்னகைத்து
   சாலையோரம் கண்களை வலை  வீசினேன்
   கெள தின்னும் குதிரை, ஒரு வண்டியை இழுத்துப் பறந்தது(கெள - கொள்ளு)


அதிலே பறக்க நானும் ஆசை கொண்டேன்
அவ்வண்டியிலே ஏறி உலகெலாம் கண்டேன்
உவகை கொப்பளிக்க உலகெலாம் கண்டபின்
ஓரிடத்தில் இறங்கி சா வின் சாறு குடித்தேன்(சா - தேயிலைச் செடி)
குடித்து முடித்ததும் அருகிருந்த கோவிலுக்குச் சென்றேன்
கண்கள் பனிக்க "சி" யைப் பாடினேன்(சி - சிவன்)
"சி" யைப் பாடி பிரகாரம் சுற்றி
பூவை மேவும் "சீ" வைப் பாடினேன்(சீ - திருமகள்)
பாடிப் பரவி வெளியே வந்து
பாதணி எடுத்து காலில் அணிகையில்
அணிமையில் வந்து நாயொன்று மோந்தது
சு என்றேன், அப்படியே நின்றது(சு - விரட்டும் குறி)
சூ என்றேன், பயந்து சென்றது - அன்னணம் , (சூ - விரட்டும் குறி)
செள ஒருத்தி வந்து பூக்கூடை காட்டி(செள - சிறுமி)
வாங்கிக்கோ சாமியென்று கை கூப்பி இறைஞ்சினாள்
ஏகப்பட்ட சாமிகள் கோவிலுள் வீற்றிருக்க
ஏகனான என்னை சாமியென்று சொல்கிறாளே
என்றெண்ணி ஒருகணம் அப்படியே நின்றேன்
அவளை ஆற்ற இருமுழம் பூ வாங்கி 
ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டேன் - அப்போது
எந்தன் செயலை வழிமொழிவது போல்
வானமழையும் அங்கு "சோ"வென்று பெய்தது


"த" படைத்த இவ்வருமையான உலகிலே(த - நான்முகன்)
தா வென்று கேட்காமலே வருகிறதே சோனை
அடடா !! அடடா !! அற்புதம் !! அற்புதம் !!
சேனைத் துளி கொண்டு சோனை வந்ததால்
"தீ" ப்பிழம்பாம் சூரியனை மேகம் மறைத்ததே !!
அந்நேரத்தில்  நானோர் சக்கரவாகமாகி
மழைநீரை "து" வாய் வாயார உண்டேன் (து - உணவு)
அதனைக் காட்டிலும் "தூ" ஏதுமில்லை என்பதைக் கண்டேன் (தூ - தூய்மை)
மண் தேவை அறிந்து மழையை அளிக்கும்
விண் "தே"வை நினைத்து மெய் சிலிர்த்து நின்றேன் (தே - தெய்வம்)
ரோட்டிலே மனிதர்கள் ஏராளம் இருப்பினும்
பசுவனத்து கேகயமாய் தையென்று குதித்து
களிநடம் புரிந்து கழிபேருவகை கொண்டேன்
கொஞ்ச நேரத்தில் மழை விட்டது - ஆனால்
மழையை என்னால் விட முடியவில்லை
சிலையாய்ச் சமைந்து வானையே பார்த்தேன் - அப்போது
என் பின்னின்ற ஒருவர் தோ தோ என்று (தோ -  நாயை விரட்டும் ஒலி)
தன்  நாயை அழைத்து என்னருகில் வந்து
 "சார் கொஞ்சம் வழி விடுங்க போகணும்" என்றார்

வழி விட்டேன், அவர் தன்வழி போனார்
அவர் போனதும் நானும் என்வழி போனேன்
போகின்ற போது பா ஒன்று தோன்றியது(பா - கவிதை)
பாவை  நான் எழுதி முடித்ததும்
அதற்கு அழகாய் இசை சேர்ப்பது போல்
பிப்பீ என்றூதி மாட்டுக்காரன் வந்தான்
வீதியிலே  கச்சேரி செய்யும்  பாட்டுக்காரன் வந்தான்
என் பாவை அவன் இசையில்
கற்பனை செய்தேன், எப்படியிருக்கும் என்று
நாட்டுப்புறப் பாடல்கள் ஏராளம் இருந்தாலும்
ரோட்டுப்புறப் பாடலாய் என்பா இருக்குமென்று
மனதிற்குள் சொல்லி மனதிற்குள் சிரித்தேன்
என் சிரிப்பைத் தானும் கேட்டதோ என்னவோ
சாலைப் "பூ"வும் தன்னிதழ் விரித்து சிரித்தது
நடந்ததை எண்ணி அசைபோட்ட வாறே
நடையினை போட்டு வீட்டினை அடைந்தேன்
"ஏன் தாமதம் ?  நடைபயிற்சி சென்று
என்ன வெட்டி முறித்தாய்" என்று மனைவி கேட்டாள்
"மழையைக் கொஞ்சம் ரசித்தேன்" என்று சொன்னேன் - அதைஉனப்
பொருட்படுத்தாதவளாய் பையில் என்னென்றாள்
பிளாஸ்டிக் பூ என்றேன் !! புரியாமல் விழித்தாள்
மல்லிப்பூவை பிளாஸ்டிக் பையில் வாங்கியதால்
பிளாஸ்டிக் பூ ஈது என்று மொக்கை போட்டேன்
அய்யோ என்றலறி பையினைப் பறித்தாள்
பையைக் கூட பையப் பறிக்காமல் போகிறாளே
அவளின் மனதில் என்ன கோபமோ என்று யோசித்தேன் ;


அவளைத் தொடர்ந்து அடுக்களை சென்றேன்
"உன் கோபம் ரொம்பவே ந" என்றேன் 
"அப்படியென்றால் என்ன என்றாள் ?"
"ந என்றால் மிகுதி" என்றேன்
அவள் பதிலேதும் சொல்லாமல் அப்படியே நின்றாள்
" "நா"வை அடக்காமல் வார்த்தை சொன்னாயே
 உனக்கு "நி" யில் வெகுளி இருக்கக் கூடாது ( நி - அண்மை)
 நீ அப்படியிருந்தால் என் மனம் தாங்காது - ஆதலால்
சினத்தைப் போக்க "நு" செய வேண்டும் ( நு - தியானம்)
நிலவு குடியிருக்கும் அழகான முகத்தில்
கோபம் வந்தால்  "நூ" வெடிக்கும் ( நூ - எள் )​
எனவே, நை நை என்றிராமல்
கோபம் தவிர்த்து  "நே" வைக் கொடுத்தால்( நே - அன்பு)
"நொ"  நம் மனதை வாட்டாது ( நொ - துன்பம்)
"நோ" நம் உடலை அண்டாது ( நோ - நோய்)
மனிதன், ஒரு நெள மாதிரி( நெள - மரக்கலம்)
அதில் கோபம் என்றொரு பொத்தல் விழுந்தால்
நெள உடனே கவிழ்ந்து மூழ்கிப் போகும்"
என்று எனக்குத் தெரிந்த அறிவுரை கூறி
அவள் சினத்திற்கான காரணம் கேட்டேன் ;


"காலை எழுந்ததும் தூக்கம் கலக்க
காபியில் சீனி குறைவாய் கலந்துவிட்டேன்
அதைக் குடித்ததும் உன் அம்மா
ம வை  நெஞ்சில்  நிறைத்து வைத்து( ம - நஞ்சு)
மா வின் பெயரால் என்னை ஏசினாள்(மா - விலங்கு)
அகவையில் எனை விட மூத்தவள் அல்லவா 
என்னால் எதுவும் செய்ய முடியவில்லை
அதுவே உன்மேல் கோபம் மீ மிசை வந்ததென்றாள் ; (மீ - மேலே)
ஓ !! இவ்வளவு தானா சங்கதி என்று
ஆசை மனைவியின் அருகில் சென்று
"செல்லமே,
எம்மாவுக்கு இப்போது மூ க்காலம்(எம்மா - என் அம்மா, மூ - மூப்பு)
அதனால் இப்படி நடப்பது இயல்பு
இனியும் அப்பருவம் மே அடையாது (மே - மேம்பாடு)
ஆனவரை அம்மாவிடம் மே வாயிரு (மே - அன்பு)
ஆனது ஆகட்டும், போனது போகட்டும்
உனக்கு துணையாய் நானென்றும் உண்டு
மையில் தீட்டிய உன்னழகிய கண்கள்(மை - அஞ்சனம்)
மையல் ததும்ப புன்னகைக்க வேண்டும்
அதில் கண்ணீர் நித்தமும் கூடாது என்று சொல்லி - அவள்
கண்ணீர்த் துளியைச் சுண்டி எறிந்தேன்


அவ்வமயம், என்னவள் 
தன் கள்ளுண்ட இதழை இருமுறை மடித்து
காந்தி மதி போல சாந்தம் செறிந்து
தன்னழகிய கண்ணை "ய" மாய் விரித்து( ய - அகலம்)
என்னருகில் வா என்று சொல்லாமல் சொன்னாள் - அக்கணமே
அவள் பக்கம் பக்கம் பக்கம் வந்தேன்
வெட்கம் வெட்கம் வெட்கம் எனும்படி
வானில் பறக்கும் "வி" யின் சிறகாய்(வி - சிறகு)
அவளின் இமைகள் கிளைத்து நின்றன
என் கண்ணும் அவள் கண்ணும்
ஒன்றை ஒன்று தின்று கொள்ள
அவள் கண்ணிலிரிந்து காதல் "வீ" விழவே( வீ - வீழும் மலர்)
நான் தீயின் முன்னின்ற "வை" யாக ஆனேன் ( வை - வைக்கோல்)
அவள் கண்ணை விட  ஓர் "ஃ" உண்டோ உலகிலே 

No comments:

Post a Comment