Tuesday, November 16, 2010

உயர்ந்த காதல்

வானக் கடலில்
விரைந்து செல்லும்
ஆகாயக் கப்பலில்
உன்னை விட்டு
நான் மட்டும்
பயணித்துக் கொண்டிருந்தேன் ;
இருக்கையில் சாய்ந்தவாறே
கண்களை மூடிச்
சயனித்துக் கொண்டிருந்தேன் ;

35,000 அடி
உயரத்தில் விமானம்
பறந்து கொண்டிருந்தது ;
உன்னையே நினைத்திருந்ததால்
நீயும் என்னோடு
பறந்து கொண்டிருந்தாய் ;

உயரப் பறக்க
சிறகு வேண்டும்
என்று இதுகாறும்
எண்ணியிருந்தேன் ;

ஆனால்
அந்த வாக்கு
உன்னால் இன்று
பொய்த்து விட்டது
உன் மேல் நான்
வைத்த காதல்
சிறகில்லாமல் பறந்து
அந்த இயற்கையையே
ஜெயித்து விட்டது ;

அந்தக்
காதல் தள்ள
முங்கி முங்கி
எழுந்தேன் உன் நினைவாற்றில் ;
உன்னைப் பற்றி
நினைத்ததால் அபாரமாக
இருந்தது என் நினைவாற்றல் ;

அப்போது - உன்னை
நினைத்துக் கொண்டே
இறுக்கிக் கட்டியிருந்த
அரைக்கச்சை தடவினேன் (அரைக்கச்சு - Belt )

நீ அறியாமல்
உன் பின்னிருந்து
உன் இடையை
இறுக்கி அணைத்த
கணங்கள் என்
ஞாபகத்திற்கு வந்தன ;

சற்று நிமிர்ந்து
ஜன்னலை நோக்கினேன் ;

மேகங்களை உரசி
விமானம் பறக்கையில் - உன்
பாகங்களை உரசி
புணர்ந்த நிமிடங்கள்
ஞாபகத்திற்கு வந்தன ;

அவ்வமயம்
திடீரென்று "டர்புலன்ஸ்"
காரணமாக விமானம்
ஆட்டம் கண்டது ;

அவ்வப்போது
ஆடியும் அசைந்தும்
ஆளைக் கொல்லும் - உன்
கொழுத்த தனங்கள்
ஞாபகத்திற்கு வந்தன ;

இவ்வாறு உன்
நினைவுப் படுக்கையில்
படுத்திருந்த போது
சற்று மூச்சுத்திணறல்
ஏற்பட்டது ;

ஏனென்று ஆய்ந்தேன் ;

"விமானம் மிகுந்த
உயரத்தில் பறக்கிறது"
என்ற சேதி - என்
காதினில் விழுந்தது ;

உடனே ஆக்ஸிஜன்
முகமூடிகள் மேலிருந்து
இறங்க

விமானி விமானத்தைச்
சற்று தாழ்வாக
இறக்க

எல்லோரும் "ஃவூ"
என்று பெருமூச்செறிந்து
இளைப்பாறலாம் என்று
நினைக்கையில்

விமானியின் பிழையோ,
இன்ஜின் பழுதோ,
வானிலை மாற்றமோ....

என்னவென்று தெரியவில்லை
விமானம் திடீரென்று
வசமிழந்தது - வசமிழந்து
கன்னா பின்னாவென்று
சுழன்றது ;

என்ன செய்தும்
சுழற்சி அடங்கவில்லை ;
சுழற்சி அடங்காவிடினும் - விமானிகளின்
முயற்சி அடங்கவில்லை ;

எனக்கு நிலைமை
புரிந்து விட்டது

கண் முன்னே
செயற்கை ஆக்ஸிஜன்
முகமூடிகள் தொங்கின ;

ஆனால் நானோ
என் இயற்கை
ஆக்ஸிஜனாகிய உன்னை
நினைத்துக் கொண்டேன் ;

இது தான்
தருணம் என்று
என் மூச்சைப்
பலமுறை உள்ளிழுத்து
சுவாசித்துக் கொண்டேன் ;

உன்னை எத்துணை
முடியுமோ அத்துணை
சேகரித்துக் கொண்டேன் ;

விமானம் இறங்கிக்
கொண்டே இருந்தது ;
உன் சேகரிப்புகள்
ஏறிக் கொண்டேயிருந்தன ;

எல்லோருக்கும் மரணந்தான்
அதில் சந்தேகமில்லை ;

மற்றவர்களுக்கெல்லாம் அது மண்ணோடு ;
எனக்கு மட்டும் அது உன்னோடு ;

Tuesday, June 29, 2010

ஒரு வண்ணக்கதை

வானம் தாராளமாக
விரிந்திருந்தது ;
மேகம் மழைநீரைச்
சொரிந்திருந்தது ;
சூரியன் நெருப்பால்
எரிந்திருந்தது ;
காற்று குளிரோடு
திரிந்திருந்தது - அந்த
நேரத்தில் தன்மேல்
இருந்தவர்கள் மிகவும்
குறைவு என்பது
நிலத்திற்கு நன்றாகத்
தெரிந்திருந்தது ;

அப்போது
ஐந்து பூதங்களின்
முன்னிலையில்
ஆறு போல் அழகாக
வளைந்து
ஏழு வண்ணங்களால்
கூடி
எட்டாத உயரத்தில்
வானவில் வசீகரமாக
வீற்றிருந்தது ;

வானவில்லை யாரும்
பார்க்கவில்லை - இருப்பினும்
வானவில் அதற்காகக்
கவலைப்படவில்லை ;

"இங்கே ஏன்
வந்தாய் ?" என்று
வானமும் கேட்கவில்லை ;

"நான் வந்தே
தீருவேன்" என்று
வானவில் முழங்கவுமில்லை ;

இந்திரவில்லே !
நீ எங்கிருந்து வருகிறாய் ?

உன் ஆயுள்
சில நேரந்தான் - ஆயினும்
நீ கவலையே
படாமல் சந்தோஶமாக
வாழ்ந்து விடுகிறாய் ;

மனிதனின் ஆயுள்
பல காலந்தான் - ஆனால்
அவனால் இந்த
உலகத்தில் சந்தோஶமாக
வாழ முடியவில்லை ;

மனிதனுக்கும் உனக்கும்
ஒரே வித்தியாசந்தான்
உனக்கு வண்ணங்கள்
அவனுக்கு எண்ணங்கள் ;

உன் வண்ணங்களின்
எண்ணங்களை மட்டுமல்ல
தன் எண்ணங்களின்
வண்ணங்களையும் மனிதன்
புரிந்து கொள்வதில்லை ;

ஏழு வண்ணங்களிருந்தும் - நீ
ஏழையாய் இருப்பதில்லை ;
அந்த வானமே
உனக்குத் தானே ?!

நீ
தனியாக நிற்பதில்லை
தனித்து நிற்கிறாய் ;
தனித்து நிற்பதனால்
தன்னிறைவோடு இருக்கிறாய் ;

நீ
உனக்காக வாழ்கிறாய் ;
உள்ளொளியோடு திகழ்கிறாய் ;

மனிதன்
பிறர்க்காக வாழ்கிறான் ;
தலைகனத்தோடு திரிகிறான் ;

"நான்" என்ற
எண்ணம் உனக்குக்
கிஞ்சித்தும் இருப்பதில்லை ;

ஆதலால் நீ
வானவில் மட்டுமல்ல
ஞானவில்லும் கூட ;

உன்னைப் பற்றி
இத்துணை எழுதியும்
திருப்தி அடையாமல்
நான் யோசித்துக்
கொண்டே இருந்தேன் ;

ஆனால் நீ
எனக்காகக் காத்திராமல்
மெல்ல மெல்ல
மறைந்து கொண்டிருந்தாய் ;

Thursday, June 10, 2010

காதலும் கல்யாணமும்

காதல் கல்யாணத்தின்
கரத்தைப் பிடிக்கிறது
கல்யாணமோ காதலின்
கழுத்தைப் பிடிக்கிறது

என் செய்வது ?

கழுத்தைப் பிடிப்பதே
எல்லாருக்கும் பிடிக்கிறது ;

காதலோ
கல்யாணத்தின் பிடியிலிருந்து
நழுவ முடியாமல்
குற்றுயிரும் குலையுயிருமாய்
கண்ணீர் வடிக்கிறது ;

காதலின் கண்ணீரை
யார் துடைப்பார் ?
கல்யாணத்தின் கரத்தை
யார் உடைப்பார் ?

Sunday, May 9, 2010

பொருளின் பொருள்

நிம்மதியாக வாழ்வதற்கு
மிகப்பெரிய வீடு

வெப்பத்தைத் தணிப்பதற்கு
அறைகளில் குளுமி*

பரவசத்தோடு படிப்பதற்கு
பக்தி இதழ்கள்

அவசரத் தேவைக்கு
பக்கத்தில் ஏ.டி.எம்

வசதியாகக் குளிப்பதற்கு
வெந்நீர் குழாயும்
தண்ணீர் குழாயும்

ருசிக்காக சமைக்காமல்
பசிக்காக சமைக்கும்
ஒரு சமையற்காரி

காதோடு வைத்து
களிப்புற சின்னஞ்சிறிய
வானொலிப் பெட்டி

பொழுதைப் போக்குவதற்கு
செட்டாப் பாக்ஸுடன்
கூடிய தொலைக்காட்சி

நினைத்ததை எல்லாம்
பகிர்ந்து கொள்ள
உயிரோடிருக்கும் தொலைபேசி

தகவல்களைக் கண்டறிய
இணையத்தின் தொடர்பு
கொண்ட கணிப்பொறி

ம்...

போதும் வேறொன்றும்
தேவையில்லை ;

குழந்தைகளைப் பிரிந்து
வாழும் வயதான
பெற்றோர்க்கு வேறு
துணை வேண்டாம் ;

குளுமி - ஆங்கிலத்தில் ஏ.ஸி

Wednesday, May 5, 2010

தைரியம்

தலைகீழாகச் செல்லும்
போதும் சாவைப்
பற்றி கவலைப்
படாமல் இருக்கின்றன
மிதிவண்டியில் செல்லும்
கோழிகள் ;

Friday, April 30, 2010

வெண்மை


நாஷனல் ஜியாகரஃபிக்
சானலில் ஒரு காட்சி

ஒரு வெண்புலி
எழுந்து நின்று
ஒரு மனிதனைக்
கட்டிப்பிடித்துக் கொண்டது ;

அப்போது மனதிற்குள்
சொல்லிக் கொண்டேன்

"புலியே உன்னை
வெள்ளையாகப் படைத்ததில்
தவறே இல்லை";

என்று ;

Thursday, April 29, 2010

நகல் மொழி


ஒத்துக் கொள்கிறேன் 
என் அசலைப் 
போல் நானொன்றும்
அழகில்லை தான் ;

ஆனால் 
இந்த உலகத்தில் 
எனக்குத் தான் 
ஏகப்பட்ட கிராக்கி ;

என் அசலுக்கும்
எனக்கும் நிறைய
வேற்றுமைகள் ;

என் அசலைப்
போல் எனக்கு
வாஸம் கிடையாது - அதனால்
யாருக்கும் என்னிடம்
நேசம் கிடையாது ;

என் அசலைப்
போல் நான்
வாடிப் போவதில்லை - ஆனால்
யாரும் என்னைச்
சூடிக் கொள்வதுமில்லை ;

என் அசலை
வண்டினங்கள் சுற்றும் ;
என்னை ஒரு
ஈ கூட சுத்தாது ;

என் அசலுக்காக
தண்ணீர் சிந்துவார்கள் ;
எனக்காக துளி
கண்ணீர் கூட சிந்தமாட்டார்கள் ;

என் அசலுக்கு
சூரிய வெளிச்சம்
தேவை ;

எனக்கு மின்விளக்கின்
வெளிச்சம் தான்
தேவை ;

என்று
பார்க்கப் பார்க்க
புலம்பிக்கொண்டே இருந்தது
என் குளியலறைப்
பிளாஸ்டிக் பூ ;


என்ன செய்வது ?

நகல் என்றாலே
அப்படித் தானே :


Wednesday, April 28, 2010

ஒரே சிம்மாசனத்தில் இரண்டு பேர்


தலைக்கவசம் அணிந்தவாறு
வேகமாக பைக்கை
ஓட்டுகிறான் கணவன் ;
தலைவனின் தோளில்
ஐவிரல் பதித்தவாறு
பின் இருக்கையில்
இருக்கிறாள் மனைவி ;

பைக்கைப் போலவே
வேகமாகச் செல்கிறது
அவர்களின் வாழ்க்கையும் ;

கல்யாணத்திற்கு முன்
காதலிப்பதற்கு  நேரம்
பத்தாமலேயே இருக்கிறது ;

ஆனால்...
சில சமயம்
கல்யாணத்திற்குப் பின்
காதல்  கூட
பத்தாமலேயே இருக்கிறது ;

பைக்கில் கணவனும்
மனைவியும் போகையில்
ஒருவர் முகத்தை
ஒருவர் பார்க்கமுடியாது ;

ஆனால்,
ஒருவர் மனத்தை
ஒருவர் உணர
முடியாதா ?

பார்த்துப் பழகும்
காதலில் நெருக்கம்
அதிகம் ;

உணர்ந்து உருகும்
காதலில் அணுக்கம்
அதிகம் ;

இருவர் வாங்கும்
மூச்சுக் காற்றிலும்
இருவர் பேசும்
பேச்சு மொழியிலும்
கலந்து தானிருக்கிறது
அவர்களுக்கான காதல் ;

இவர்கள் காதலைப்
பற்றி காலத்திற்கு
என்ன கவலை ?

அது எப்போதும்
போல் சென்றுகொண்டே
தானிருக்கிறது ;
இரண்டொரு நிமிடங்கள்
போக்குவரத்து விளக்கில்
நிற்கிறது வண்டி ;

அலுவலகம் வர
இன்னும் கொஞ்ச
நேரமே இருப்பதால்
கணவனின் தோளில்
அழுத்தமாக விரல்
பதிக்கிறாள் மனைவி ;

அலுவலகம் வர
இன்னும் கொஞ்ச
நேரமே இருப்பதால்
வண்டியை மெதுவாகச்
செலுத்துகிறான் கணவன் ;

போக்குவரத்து நெரிசலில்
மெல்ல மெல்ல
நசுங்கிக் கொண்டிருக்கிறது
அவர்களின் காதல் ;

Monday, March 8, 2010

நீயும் மழையும்

Hi Guys,
I am posting a poem written by me. Would love to know your comments.

மனோகரமான
மாலை வேளையில்
சாலை வீதியில்
வேலை ஏதுமின்றி
போய்க்கொண்டிருந்தேன் ;

அன்றைக்கு
ஏனோ வானம்
மேகக்கூட்டமாய் காட்சியளிக்காமல்
மேகமூட்டமாய் காட்சியளித்தது ;

அதைக் கண்டவுடன்
காரணம் ஏதுமின்றி
ஆழ்மனம் களித்தது ;
சிறிது நேரத்தில்
எங்கிருந்தோ வந்த - ஒரு
குளிர்காற்று என்
முகத்தைத் தாக்கியது ;

அந்த
மென்காற்றில் கொஞ்சம்
வேகம் தெரிந்தது ;
என்னை அபகரிக்க
வேண்டும் என்ற
மோகம் தெரிந்தது ;
காற்றால் தேகம்
கிறங்க - அது
உன் ஸ்பரிசம்
எனத் தெரிந்து
கொண்டேன் ;
அந்தத் தொடுதலில்
உன் எண்ணம்
யாதெனப் புரிந்து
கொண்டேன் ;

அப்போது பார்த்து
வான்கொடியில் உலரப்
போட்டிருந்த மேகத்துணிகளைக்
காற்று பிழிய
ஆகாயம் மேலிருந்து - ஒரு
நீர்வீழ்ச்சியைப் பொழிய

அந்நீர்த்துளிகள் யாவும்
என் மேலே விழுந்தன;
விழுந்து சுவைத்தறியா
தித்திப்பைக் கொடுத்தன ;
ஆம் !
என்னில் விழுந்த
நீர்முத்துக்கள் யாவும்
நீ கொடுத்த முத்தங்களாய்
உருமாறியது ;

தலையில், நெற்றியில்
கண்களில், இதழ்களில்.... என
நீ செய்த பயணத்தால்
உள்ளம் கள்ளுண்ட
வண்டைப் போல் தடுமாறியது ;

அவ்வமயம் ஒரு
மின்னல் வெட்டியது -
நீ புன்னகைத்தாய் ;
சில
கணங்கள் கழித்து
இடியொலி கேட்டது;
நீ பலமாகச்
சிரித்துக் கொண்டிருந்தாய்;

உன் சிரிப்பின்
அர்த்தம் எனக்குப்
புரியவில்லை;
உன்முத்தங்கொடுத்த போதையால்
கண்ணுக்கேதிரே எதுவும்
தெரியவில்லை;

அப்போது திடீரென்று
உன் மழைக்கரத்தால்- என்னை
இழுத்து
வளைத்து
அணைத்து - பின்
ஆரத் தழுவினாய்;
வன்மையும் மென்மையும் - ஒரு
சேரத் தழுவினாய்;
காதல் செய்யா
இடம் பார்த்து
நீ நெருங்கினாய்;
நான் நொறுங்கினேன்;
என்னுடலின் இடமெங்கும்
ஆளத் தொடங்கினாய்; நான்
மீள முயன்றேன்;
தோற்றுப் போனேன் !! உனக்கு
அடிமை ஆனேன்;

பின்
மயக்கம் தெளிந்து
கண் விழித்தேன்;
உன்னைத் தேடிச்
சுற்றுமுற்றும் பார்த்தேன்;
மழை விட்டிருந்தாலும்
வானம் விடவில்லை;
அப்போது
புரிந்து கொண்டேன்; நீ
எப்போதும்
என்னோடு இருப்பாய் என்று
தெரிந்து கொண்டேன்;

என்
இல்லம் நோக்கி
நடக்க ஆரம்பித்தேன்;