Friday, January 13, 2012

உனக்கும் எனக்கும்


உறக்கம் உன்னைத் தொட்டுவிட்டால்
உடனே உறங்கப் போகாதே - நீ
உறங்கப் போகும் முன்னாலே - உன்
உருள்விழி இரண்டும் மயங்கிடுமே - அம்
மயக்கம் வேண்டும் எனக்கு - இதில்
தயக்கம் உண்டோ உனக்கு ?

சோகம் உன்னைச் சுட்டுவிட்டால் - கண்
சோனை நீரைத் துடைக்காதே
மேகம் போலே நீயழுதால் - உன்
முகமும் அழகாய்ச் சுருங்கிடுமே - அச்
சுருக்கம் வேண்டும் எனக்கு - தனி
வருக்கம் சுருக்கம் உனக்கு ?

தூசி கண்ணில் விழுந்துவிட்டால்
தோழியை கடிதே அழையாதே - உன்
நாசி செய்யும் முகபாவம்
நன்றாய் உடனே மலர்ந்திடுமே - அப்
"பா" வம் வேண்டும் எனக்கு - இதில்
பாவம் உண்டோ உனக்கு ?

நகமும் கையில் வளர்ந்துவிட்டால்
நங்காய் அதை நீ நறுக்காதே
சுகமாய் நீண்ட நகக்கண்ணில்
சரமாய் காமம் ஒளிந்திடுமே - அக்
காமம் வேண்டும் எனக்கு - அது
சேமம் தானே உனக்கு ?

குளித்து முடித்து வருகையிலே
குயிலாய் ஆடை அணியாதே - நீ
ஒளித்து வைத்த அழகினிலே - ஒரு
குழந்தை எனக்குத் தெரிந்திடுமே - அக்
குழந்தை வேண்டும் எனக்கு - இதில்
குழப்பம் உண்டோ உனக்கு ?
(குழந்தையும் நிர்வாணமாகத் தானே இருக்கும். அது தான் இந்தப் பாடலில் குறிப்பிடுகிறேன். வேறெதுவும் அல்ல )

நெற்றிப் பரப்பில் எப்போதும்
நீ திலகமிட்டுக் கொள்ளாதே - தனைச்
சுற்றி எதுவும் இல்லாமல் - உன்
நெற்றி நிர்வாணம் ஆகிடுமே - அந்த
நிர்வாணம் வேண்டும் உனக்கு - அதன்
நிர்மாணம் வேண்டும் எனக்கு ;

கழுத்தைச் சுற்றி எந்நாளும் - சிறு
கனகம் அணிந்து திரியாதே
அழுத்தம் இல்லாக் கழுத்தினிலே - உணவு
அருந்தும் அழகு தெரிந்திடுமே - அவ்
அழகே வேண்டும் எனக்கு
அதுவே பொறுப்பு உனக்கு

மாதே உந்தன் காதுகளில்
மறந்தும் துளைகள் போடாதே
காதில் துளையும் அற்றிருந்தால்
உன்னழகும் மிச்சம் ஆகிடுமே - அம்
மிச்சம் வேண்டும் எனக்கு - இதில்
ஒச்சம் உண்டோ உனக்கு ?

எத்தனை உனக்குள் இருக்கிறதோ
அத்தனை எனக்குள் சுரக்கிறதோ ? - இப்
பித்தனை சற்றே மனமிரங்கி நீ
பொறுத்தருளாது போனாலும் அடி
இன்னும் வேண்டும் எனக்கு
இதுவே தொல்லை உனக்கு







Wednesday, January 11, 2012

நின்று போன வண்டி


இன்று ரோட்டில்
என் பக்கத்தில் - ஒரு
முக்காடு அணிந்த
பூக்காடு போனது - கண்
வேக்காடு ஆனது - கொடும்
சாக்காடு ஆனது ; இனி
எக்காடு சென்றாலும்
இக்காடு கிடைக்குமா ?

திக்கெட்டும் பறந்த
முக்காடால் நான்
திக்கு முக்காடிப் போனேன் ;

வீசிய காற்றில்
முக்காடும் திறக்கவில்லை ;
முழுமுகமும் தெரியவில்லை - அந்த
முக்காடால் என்நெஞ்சம்
முட்காடாய் ஆனது ;

நான் விடவில்லை
அவளருகில் சென்றேன் ;
Coolers அணிந்திருந்தாள் ;
அவளையே பிடித்திருந்தாலும்
அது ஒன்று தான்
அவளிடம் பிடிக்கவில்லை ;

பாதை வளர்ந்தது ;
சற்று நேரத்தில்
சிக்னல் விழுந்தது ;

சிவப்பு சிக்னலை
எனக்கு இன்று
தான் மிகவும்
பிடித்திருந்தது ;

சிக்னல் மாறியதும்
அந்தப் பூ
விருட்டென்று பறந்தது ;

அவள் வண்டி சென்று விட்டது ;
என் வண்டி நின்று விட்டது ;

என் செய்ய ?

அப்படியே நின்றுவிட்டால்
மேலாளர் திட்டுவாரென
வண்டியைக் கிளப்பி
அலுவலகம் வந்துவிட்டேன் ;