Thursday, April 28, 2011

ஐந்தா ? ஆறா ?

காகமே !
சுற்றித் திரியும்
சின்னஞ்சிறிய கரிய
மேகமே !!

நான் உன்
ரசிகன் ;

நீ கறுப்பாக
இருப்பதனால் உன் மேல்
வெறுப்பு காட்டுவோர் உண்டு ;
ஆனால் நான் அப்படியல்ல
உன் மேல் அலகிலாத
விருப்பு கொண்டவன் நான் ;

நான் உன்
ரசிகனாயிருந்தாலும் உனை
நின்று ரசித்ததில்லை ;

ஆதலால்
இன்று ஒருநாள்
மற்ற அலுவல்களையெல்லாம்
ஒதுக்கிவிட்டு உன்னை
நின்று ரசிக்கலாமென்று
முடிவு செய்தேன் ;

எங்கு பார்த்தாலும்
நீ இருந்தாய் - அதனால்
உன்னைக் கண்டுபிடிப்பது
ஒன்றும் கஷ்டமாகயில்லை ;

உன்னை நன்றாக
உற்றுப் பார்த்தேன் ;
உற்றுப் பார்த்ததில்
நிறைய பெற்றுக் கொண்டேன்
நிறைய கற்றும் கொண்டேன்

நாங்களெல்லாம் எப்பொழுதேனும்
வீட்டை விட்டு
வெளியே வருகிறோம் ;
ஆனால் நீயோ
அந்த ’வெளி’யையே
வீடாக வைத்துக் கொண்டிருக்கிறாய் ;

நாங்கள் கட்டணம்
கட்டினால் தான்
மின்விசிறி காற்றளிக்கும் - ஆனால்
உனக்கோ கட்டணம்
ஏதும் இல்லாமல்
ஒரு விசிறியை
அந்த காற்றே அளிக்கிறது ;

எங்களுக்கு வெளிச்சந்தரும்
மின் விளக்குகளை
நாங்கள் அணைக்க வேண்டும் - ஆனால்
உனக்கு வெளிச்சந்தரும்
சூரியனையும் நிலவையும்
நீ அணைக்கத் தேவையே இல்லை ;

நாங்கள் பயணிக்க
இரண்டோ அல்லது
மூன்று சக்கரங்கள்
கொண்ட வாகனங்கள் தேவை ;
உனக்கோ உன்
இரண்டு சிறகுகள்
தான் சக்கரங்கள் ;

கறுப்பாக இருந்தாலும்
உன்மேல் யாரும்
இனவெறி தாக்குதல்
நடத்துவதில்லை - ஆயிரம்
யுகங்கள் ஆகியும்
இந்த பூமியில்
இனவெறித் தாக்குதல்
நடக்காத இடமேயில்லை ;

நீ முற்றும்
கறுப்பாக இருந்தால்
உன்னை அண்டங்காக்கை
என்று எக்களிப்போருண்டு ;

ஆனால் உன்
பெயர்க் காரணத்தை
நான் மட்டுமே அறிவேன் ;

"ஹே மனிதா
அறம் மறந்து
நெறி பிறழ்ந்து - நீ
நிலைகெட்டுத் திரியாதே
உன் அன்னை
பூமியை நீ
காக்கத் தவறாதே"

என்ற கருத்தைத்
தான் நீ
பெயராக வைத்திருக்கிறாய் ;

பெயரில் மட்டுமல்ல..
அந்தக் கருத்தை
உன் இதழிலும் வைத்திருக்கிறாய் ;

அதனால் தான்
போகும் இடமெல்லாம்
"கா கா" என்று
கரைந்து கொண்டே போகிறாய் ;

நீ
"கா கா" என்று
கரைந்தாலும் மனிதர்கள்
யாரும் கரைவதில்லை ;

நீ
"கா கா" என்று
கரைந்தாலும் உன்னை
"போ போ" என்று
விரட்டியவரக்ளே அதிகம் ;

கருத்து தெரிவுக்கும்
செயற்கை ஊடகங்கள்
ஏராளம் உண்டு ;

ஆனால் நீ
கருத்து தெரிவுக்கும்
இயற்கை ஊடகம் ;

உனக்காக செலவிட்ட
ஒரு நாள்
என்னுள் பல
எண்ணங்களைச் சிறகடித்துப்
பறக்கச் செய்திருந்தது ;

உன்னை விட்டுப்
பிரிகையில் எச்சமிடுவதைப்
போல் என்
மனதில் ஒரு
கேள்வியை நீ
தூவிச் சென்றுவிட்டாய் ;

ஐந்தறிவு கொண்ட
நீ இன்புற்றிருக்கிறாய் ;
ஆறறிவு கொண்ட
நான் துன்புற்றிருக்கிறேன் ;

ஆதலால்
நீயே சொல்
ஐந்து பெரிதா ?
ஆறு பெரிதா ?

Monday, April 18, 2011

சாயல்

உண்ட மயக்கத்தால் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தேன்
அம்மா வந்து எழுப்பினாள்
"டேய் அவா எல்லாம் வந்திருக்காடா
உன்ன பாக்கணும்னு சொல்றா
சீக்கிரம் எழுந்து வா"
தூக்கம் மலர்தல் ஒரு வரம்
தூக்கம் கலைதல் ஒரு சாபம்
ம்ம்... என்ன செய்வது
எனக்கு எழவே பிடிக்கவில்லை
மறுபடியும் மறுபடியும் படுக்கையில் விழவே பிடித்தது
இருப்பினும் அம்மாவாயிற்றே அவள் கட்டளைக்குக் கீழ்ப்பணிந்தேன்
கசங்கிய உடைகளை சரிசெய்த படி
கசக்கிய விழிகளை துடைத்த படி
வந்திருந்த விருந்தினரைப் பார்க்கக் கிளம்பினேன்
ஓரைந்து பேர் வந்திருந்தார்கள்
வந்திருந்தோரின் முகமுன் முகமன் கூறினேன்
என்னைப் பார்த்ததும் அவர்கள் பேச ஆரம்பித்தார்கள்
"ஹே அவன் மூஞ்சி அப்படியே அவன் அப்பாவை உரிச்சு வச்சிருக்கு
அவன் கண்ணு அவன் அம்மா கண்ணு தான்
அவன் கலர் அவன் பாட்டி கலர்
அவன் வழுக்கை கூட ......."
அந்த கடைசி வாசகம் எனக்குப் பிடிக்கவேயில்லை
உடனே அந்த இடத்தை விட்டகன்றேன்
என் முகம் என் அப்பா போன்றதாம்
என் கண் என் அம்மா போன்றதாம்....
அவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும்
எனக்கு அதைப் பற்றியெல்லாம் கவலையில்லை
வந்திருந்தோர்க்குத் தான் ஒரு விஷயம் தெரியவே தெரியாதே
என் உள்ளம் மட்டும் உன் போன்றது என்று !!!