Wednesday, October 3, 2012



காளமேகரின் சிலேடை "கள் " ளில் மதி மயங்கி அதன் தாக்கத்தில் நானும் வெண்பா வடிவில் சிலேடைகளை எழுதிப் பார்க்க ஆசைப்பட்டேன்.  

அதன் வடிவே இந்த சிலேடைகள். 


1.

சிக்காமல் சண்டையிடும் சிக்கியதும் கைகூப்பும்
அக்காலே கொண்டவர்க் காட்பட்டும்  - உக்கிரமாய்ச்
சாதலையே அவ்வுயிர்க்குத் தந்திடுமே ஆதலால்
காதலுக்கு நேராம் கரி

பொருள் :

யானையானது நமக்கு எளிதில் கட்டுப்படாது. அப்படிக் கட்டுப்பட்டால் நம்மிடம் அன்பாக இருந்து நன்றியுடன் இருந்து கைகூப்பும். பாகனுக்கு ஆட்பட்டும்  இருக்கும். ஆனால் திடீரென்று மதம் பிடித்து பாகனையே அழித்துக் கொன்று விடும். அதே போல் காதலும் நமக்கு எளிதில் வசப்படாது. வசப்பட்டாலோ நம்மிடம் வாஞ்சையாக இருப்பது போல் இருக்கும். அதற்குப் பின் பிரிந்து விட்டால் (Break - Up ஆனால் ) நினைவுகளால்  அது கொண்டவர்களையே  கொன்று விடும். 

2. 

வட்டமாய் வீற்றிருக்கும் வெள்ளிநிறம் பெற்றிருக்கும்
பட்டொளியில் நம்மெதிரே புன்சிரிக்கும் - திட்டமுடன் 
தந்திரமாய் தேய்ந்தழிந்து தான்வளரும் எப்போதும் 
சந்திரனும் சில்லறையும் தான் 


பொருள் :

நிலா வெள்ளி நிறத்தில், வட்டமாக வானத்தில் வீற்றிருக்கும்.  வெள்ளை பட்டு போன்ற ஒளியில் நமக்கு எதிரே புன்னகை பூக்கும். வளரும். வளர்ந்த பின் தேயும். அதே போல் சில்லறைக்  காசுகளும் (எல்லாக் காசும் அல்ல ) வெள்ளி நிறத்திலும், வட்டமாகவும் இருக்கும்.  நம் கையில் இருக்கும் இந்தக் காசானது கொஞ்ச நாள் மெல்ல மெல்ல வளர்ந்து ,பெருகி பிறகு திடீரென்று தேய்ந்து சுருங்கி அழிந்து விடும். பிறகு மறுபடியும் வரும். போகும். 

3.

வண்ணங்கள் கண்டிருக்கும் வட்டமுகம் கொண்டிருக்கும் 
கண்ணெதிரில் காம்புடனே காட்சிதரும் - திண்ணமுறப் 
பன்மடலாய்ப் பல்கரங்கள் பாங்குடனே பெற்றிருக்கும் 
மின்விசிறிக் கொப்பாம் மலர்   


பொருள் :

நம் வீட்டில் சுழலும் மின்விசிறி பல வண்ணங்களில் கிடைக்கும். வட்டமான முகத்தைப் பெற்றிருக்கும்.  விட்டத்திலிருந்து ஒரு பகுதி நீண்டு வர தொங்கிய படியே காட்சி அளிக்கும். பல கரங்கள் கொண்டு திகழும். அதே போல மலர்களும் பல வண்ணங்களில் இருக்கும். வட்டமான முகத்தைக் கொண்டிருக்கும். தன் விரிந்த மடல்களுடன்  காம்புடன் காற்றில் ஆடி அழகாகக் காட்சியளிக்கும்.  இந்த மடல்கள் தான் மின்விசிறியின் கரங்களுக்கு உவமையாக சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு மின்விசிறியைத் தூக்கிப் பிடிக்க எப்படி ஒரு Rod தேவைப்படுகிறதோ அதே போல பூவைத் தாங்கிப் பிடிப்பதற்கும் ஒரு காம்பு தேவைப்படுகிறது. இந்தப் பாடலில் பூவின் காம்பு மின்விசிறியின் Rod- க்கு உவமையாக சொல்லப்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment