Monday, October 22, 2012

எழுத்து


தொலை தூரத்திலிருந்தே
என்னைத் தாக்கினாய் - அதனால்
நீ ஆயுத எழுத்து ;


தாக்கி ,
இரு கண்ணால் சுட்டாய் - அதனால்
நீ சுட்டெழுத்து ;


சுட்டு, 
ஒரு கணத்தில்
உயிரோடு உயிரானாய் - அதனால்
நீ என் உயிரெழுத்து ;

விடக் கூடிய எழுத்தா நீ ?

உனை எழுத
எங்கு கிடைத்தது 
அந்தக் கடவுளுக்கு
ஒரு எழுத்தாணி ; 


ஆதலால் சற்று
யோசித்தேன் - நீ தான் 
எனக்கு நல்ல துணையெழுத்து ; 
எனை நீங்காத இணையெழுத்து ;

தனியெழுத்தாய்  நான் நின்றேன் ;
நீ வந்தாய் ;
நான் ஒரு சொல்லெழுத்தானேன் ;
உன் செல்லெழுத்தானேன் ;

நீ என்ன என் ஒற்றெழுத்தா 
கண்டு கொள்ளாது இருக்க ;
நீ என் காலெழுத்து அன்றோ
கண்டு கொண்டே இருக்க - கண்டு
நீண்டு கொண்டே இருக்க ;

நீ, ஒரு எழுத்து ;
நான் ஒரு எழுத்து ;
நீ நானானால்
நான் நீயானால்
ஓரு எழுத்து ஈரெழுத்து - இல்லை,
ஈரெழுத்து ஒரு எழுத்து ;


ஒன்று சொல்கிறேன் கேள் :

சின்னதாய் இருக்க
என் காதலென்ன குறிலெழுத்தா ?
இல்லை, அது நெடிலெழுத்து ;

கண்ணே !!
கடைசியாக ஒன்று,

எனைத் தலைகீழாக்கினாய் - 
அதனால் இனி
நீயே என் தலையெழுத்து 
தலையான  நிலையெழுத்து ;

No comments:

Post a Comment