Sunday, June 10, 2012

ஒன்றும் ஓராயிரமும்



                         ,
ஒரு பிரதான
சாலை போல்
இருந்தது அந்த
இடம் ;

ஆனால், அதில்
ஓர் அதிசயம் ;

பச்சை, மஞ்சள், சிகப்பு  
என பூமாலைகளை
சமிக்ஞை விளக்குகளாய்
வைத்திருந்தனர் மக்கள் ;

வழக்கம் போல்
அதை யாரும்
மதிக்கவே இல்லை, 
மிதிக்கவே செய்தனர் ;

காணும் இடமெங்கும் 
ஆயிரம் தலைகள் ;
ஆயிரம் தலைகளிடமும் 
ஆயிரம் கலைகள் ;

ஆமை போல் 
நகர்ந்தனர் சிலர் ;
சிறுத்தை போல் 
சீறினர் சிலர் ;

அவரவர் வாயொலிகளை
வைத்தே ஹாரன்களை
எழுப்பினர் பலர் ;

வண்டி அடித்துக் 
கொண்டு யாரும் முன்னேறவில்லை 
முண்டி அடித்துக் 
கொண்டே எல்லாரும் முன்னேறினர் ;

அங்கே 
காவல் இல்லாததால்
ஆவல் மிகுந்தது மக்களுக்கு ;

காணக் காண 
விழியைப்  பிதுங்க 
வைத்தது நெரிசல் ;

முன்னால் சென்றவர்கள் 
பின்னால் வந்தார்கள் ;
பின்னால்  சென்றவர்கள் 
முன்னால் வந்தார்கள் ;

இப்படியே 
சுழற்சி முறையில்
நடந்தது அந்த 
சாலை போக்குவரத்து ;

எனினும் -
எதையுமே அறியாமல் 
அங்கே பிணமாகத்
தூங்கிக் கொண்டிருந்தார் 

இவை எல்லாவற்றுக்கும் 
காரணமான ஒருவர் ; 

Saturday, March 31, 2012

இரவு

இரவே !!
நீண்டு படுத்திருக்கும்
கரிய அரவே !!

நீ எங்கிருந்து வருகிறாய் ?

பகலெனும் புற்றுக்குள்ளிருந்து
வருகிறாயா ?

ஊர் முழுதும்
ஊர்ந்து ஊர்ந்து
போகிறாயே !!

எங்கே ?

போகும் வழியில்
நீ உமிழும்
மாணிக்கம் தான்
மீன்களாய் சுடர்கின்றனவோ ?

ஆளரவம் இல்லாத
நேரத்தில் ஒரு
நீளரவம் போல்
வருகிறாயே !!

எனக்குத் தெரியும்
அதெதற்கு என்று ;

பாவம் - உனக்குப்
பசிக்கிறது ;

அசுரப் பசி ;

பேதாபேதமின்றி எல்லோரையும்
அப்படியே விழுங்குகிறாயே ?
ஏன் ?

புரிகிறது எனக்கு ;

பாம்புகள் எல்லாம்
விழுங்கித் தானே
உண்ண வேண்டும் ;

பூமியில் உள்ள
"நல்" பாம்பு கடிக்கும் ;
வானிலே உள்ள
"அல்" பாம்பு விழுங்கும் ;

நீ
எல்லாவற்றையும் விழுங்குகிறாய்
வெளிச்சம் தவிர ...

ம்ம்ம்....

உனக்கு அது
ஒவ்வாதோ ?

உண்மை தான் .....

வெளிச்சம் வந்தால்
நீ மறைந்து போகிறாய் ;
அழிந்து போவதில்லை ;

நெருப்போடு சேர்ந்த எதுவும்
நெருப்பாவது போல்
உன்னோடு சேர்ந்த எதுவும்
கருப்பாகி விடுகிறதே !!
கருப்பாகி உன்னில் ஒரு
உறுப்பாகி விடுகிறதே ;

இருட்டில் நடக்கையில்
குழியும் ஒன்று தான்
மூடியும் ஒன்று தான்
எறும்பும் ஒன்று தான்
பாம்பும் ஒன்று தான்
யானையும் ஒன்று தான்
பூனையும் ஒன்று தான்
அரசனும் ஒன்று தான்
ஆண்டியும் ஒன்று தான்...

எங்கும் கருப்பு , எதிலும் கருப்பு
அடடா என்ன விந்தை இது !!

இதை உணரவைத்த
இராவே !!
முற்றும் அறிந்த ஞானி நீ ;

ஞாயிறு ஒருப்பெருஞ்ஜோதி,
நீ கருப்பெருஞ்ஜோதி ;

ஆனால் ஒரு ஆச்சரியம்.....
இந்த ஜோதி
யாவரையும் குருடாக்கி விடுகிறதே !!

நீ வந்தால்
குன்றிமணி ஒளியின்றி
இரண்டடி முன்னால்
எடுத்து வைக்க ஏலுமா ?

உன்னைக் கண்டால்
எவர்க்கும் பயம் ;

பூமியில் உள்ள
கறுப்பினத்தைக் கண்டு மக்கள்
ஒடுக்குவர் ;

வானத்தில் உள்ள
கறுப்பினத்தைக் கண்டு மக்கள்
ஒடுங்குவர் ;

வெண்ணிற மேகமும் உன்னருகே
மைந்நிற மேகமாய்த் தெரிகிறதே ;

உனக்குள்ளும் ஒளி உண்டோ ?

பகலின் பல சத்தங்கள்
உனக்குள் அடங்கி விடுகிறதே !!

பல மொழிகள்
தெரிந்த மௌனி நீ ;

பகலுக்கு பகலவன் தேவை ;
உனக்கு நிலவு தேவையா ?
இல்லை ;

ஆரையும் சாரா அம்சமே
உன் சாராம்சம் ;

நீ திரளத் திரள
உலகம் சொக்குண்டு துயில்கிறதே ;

ஆதலால் ஒரு
மந்திரவாதி நீ ;

தேவன்
மனிதனைப் படைக்கையில்
உன்னையும் கேட்டுத்தான்
படைத்து முடித்தானோ ?

எது எப்படியோ...

என் கேள்விகள்
நீண்டு கொண்டே இருக்கும்
உன்னைப் போலவே !!

பதில் தேவையில்லை,
கேள்வி கேட்கும்
சந்தோஷமே போதும் ;

இரவே !! இப்போது
நான் விடை பெறுகிறேன் ;

மீண்டும் சந்திக்கிறேன்
உன்னைக் "கேள்விகளோடு" மட்டும் ;

Tuesday, March 20, 2012

என்னென்று சொல்வேன்

என்னென்று சொல்வேன்
அந்த அனுபவத்தை
என்னென்று சொல்வேன்..

எரிமலை திரட்டிய
தீக்குழம்பும்
பனிமலை உருட்டிய
பனிப்பந்தும்
கைகோர்த்து நடந்தால்
எப்படி இருக்கும்!!
அப்படியல்லவா இருந்தது
இல்லை.. இல்லை..

குற்றால அருவியின்
வீரியமும்
ஒற்றை மழைத்துளியின்
வாஞ்சையும்
ஒன்றோடொன்று பொருதினால்
எப்படி இருக்கும்!!
அப்படியல்லவா இருந்தது
இல்லை.. இல்லை..

நிலவற்ற வானத்தின்
ஏக்கமும்
மழைகொண்ட மேகத்தின்
கர்வமும்
ஒன்றையொன்று மணந்தால்
எப்படி இருக்கும்!!
அப்படியல்லவா இருந்தது
இல்லை.. இல்லை..

காட்டாற்று வெள்ளத்தின்
அவசரமும்
இரைதேடும் நாரையின்
நிதானமும்
சமரசம் செய்துகொண்டால்
எப்படி இருக்கும்!!
அப்படியல்லவா இருந்தது
இல்லை.. இல்லை..

கொடிபிரிந்த மலரின்
சோகமும்
தாய்கண்ட இளங்கன்றின்
உவகையும்
ஒருசேரத் தோன்றினால்
எப்படி இருக்கும்!!
அப்படியல்லவா இருந்தது
இல்லை.. இல்லை..

கண்ணெதிரில் நகையாடும்
மிருகத்தனமும்
ஆழ்மனதில் குடிகொண்ட
தெய்வாம்சமும்
ஒன்றுக்குள்ளே ஒன்றிருந்தால்
எப்படி இருக்கும்
அப்படியல்லவா இருந்தது
இல்லை.. இல்லை..

இல்லவே இல்லை
இன்னமும் இன்னமும்
அழகாகவும் நயமாகவும்
எப்படிச் சொல்வதென்று
தெரியவில்லை - நீ
எனக்குக் கொடுத்த
முத்தத்தை;

Tuesday, February 28, 2012

வரம் ஒன்று கேட்டால்...

என் வருகைக்காக
பிரார்த்தனை செய்வார்கள் ;
நான் வந்ததும்
விழுந்து விழுந்து
உபசாரம் செய்வார்கள் ;

வேளா வேளைக்கு
சோறூட்டுவார்கள் ;
ஆசை ஆசையாய்
நீராட்டுவார்கள் ;

நான் அழுதால்
ஒடி வருவார்கள் ;
நான் சிரித்தால்
கூடி மகிழ்வார்கள் ;

என் ஒவ்வோர்
அசைவுக்கும் அர்த்தம்
சொல்வார்கள் ;

என் ஒவ்வோர்
செயலையும் சிலாகித்துப்
பேசுவார்கள் ;

மொத்தத்தில்
எனை ராஜாவாய்
தூக்கிக் கொண்டாடுவார்கள் ;

எனக்கு வேலையென்று
எதுவும் இல்லை

பேசாமல் தூங்கிக்
கொண்டே இருந்தால்
போதும் ;

நான் யாரென்று
கேட்கிறீர்களா ?

என்னைக் குழந்தை
என்று சொல்வார்கள்
எல்லோரும் ;

Sunday, February 19, 2012

வெயிலும் குளிரும்


உச்சி வெயில்
உச்சியைப் பிளந்தது ;
செய்வதறியாது திகைத்தேன் - கொடுஞ்சூட்டால்
எரிந்து புகைத்தேன் ;

அப்போது
பசுமாடு ஒன்று
"...மா" என்றது ;
அதற்குப் போட்டியாக
அதனருகே குட்டிப்போட்ட
ஆடொன்று முட்டிப்போட்டு
"மே...." என்றது ;
திடீரென்று எங்கிருந்தோ
வந்த காகமொன்று
ஆட்டின் தோளுரசி
"கா கா" என்றது ;
அதைக் கேட்ட
ஆலங்குயில் ஒன்று
"கூ கூ" என்றது ;
உடனே நெடுந்தூரத்தில்
பறந்த கிளிக்கூட்டமொன்று
"கீ கீ" என்றது ;
இதையெல்லாம் வெறித்துப்
பார்த்திருந்த தெருநாயொன்று
"..ள் ..ள்" என்றது ;

ஓ ! ஒண்டமிழே !!
நீ உன்னை
எவ்வாறு இந்த
ஜீவராசிகளுக்குக் கற்றுக் கொடுத்தாய் ?

ம்ம்....

வியற்றமிழே !!
வெயிலால் வெந்தவன் - இன்று
உன்னால் குளிர்ந்தேன்
உள்மனம் மலர்ந்தேன் ;

Sunday, February 5, 2012

பெல்லி மகள்

இதோ உங்களுக்காக
என் சுயசரிதை
சொல்கிறேன் ;

தயை கூர்ந்து
கேளுங்கள் ;

சில பக்கங்கள்
தான் - ஆதலின்
சற்றே பொறுத்துக்
கொள்ளுங்கள் ;
என்
ஆடை சற்று
சரிந்தாலே என்
சுயம் தெரியும் - எனக்கு
செயம் பெருகும் ;

எனவே இந்தச்
சுயசரிதையின் தலைப்பு
"சுயசரிதை" தான் ;

என் நாடு
உலக வரைபடத்தின்
நடுவில் இருக்கும் ;

அதனால் தான்
என் பிழைப்பும்
நடுவில் இருக்கிறதோ
என்னவோ ?

ஆம் ,
"வயிற்றுப்" பிழைப்பே - என்
வயிற்றுப் பிழைப்பு ;

பிறர்க்கு வாழ்க்கை
ஓடிக் கொண்டே இருக்கும் ;
எனக்கு வாழ்க்கை
ஆடிக் கொண்டே இருக்கும் ;

இந்தக் கலைக்குப்
பின்னால் எத்தனை
கொலைகள் ?
மண்நோக்கி விழுந்தாலும்
மகிழ்வோடு விழுமே
ஒரு நீர்த்துளி

அதைப் போல்
கொன்றேன் என்
அச்சத்தை அச்சமில்லாமல் ;

வண்டு குடைந்தாலும்
வாவென்று அணைக்குமே
ஒரு பூ

அதைப் போல்
கொன்றேன் என்
வெட்கத்தை வெட்கமில்லாமல் ;

கடலில் இறங்கினாலும்
கலக்கமின்றி செல்லுமே
ஒரு படகு

அதைப் போல்
கொன்றேன் என்
தயக்கத்தைத் தயக்கமில்லாமல் ;

இம்மூன்றையும் கொன்று
என்னையே தந்தேன்
பெல்லி கலைத்தாயிடம் ;

அவள்
ஏற்றாள் கொலையை - எனக்கு
கொடுத்தாள் கலையை ;

அக்கலையை வளர்த்தேன் - ஆனால்
உடம்பை வளர்க்கவில்லை ;

உடம்பை வளர்த்தால் - என்
கலையின் வளர்ச்சியேது ?

வளர்த்த கலையை
உலகுக்குக் காண்பிக்க
ஒருநாள் மேடையேறினேன் ;

விரித்து விட்ட கூந்தல் ,
வளையம் அணிந்த தொப்புள்,
தொடை தெரிந்த பாவாடை

இவற்றினோடு நின்றேன்
சபையோர் முன் ;

டர்புக்காவை ஒருவன்
வாசிக்கத் தொடங்குகையில்
எனை மறந்து ஆடினேன் ;

வேறெதையும் ஆட்டாமல்
இடுப்பையே ஆட்டினேன் ;

என்னுடலில் ஓரலை
எழுந்து அடங்கியது ;

அலை வரிசையாய் திரண்ட கூட்டம்
அலை வரிசையாய் எழுந்ததை
அலை பாயாமல் பார்த்தது ;
அப்போது தான் புரிந்தது
என் அலைவரிசையும்
அவர்கள் அலைவரிசையும்
ஒன்று தானென்று ;

நான் விடவில்லை,
இன்னும் வளைந்து
நெளிந்து ஆடினேன் ;

என்
இடுப்பாடியது - இடுப்பிருக்கும்
வயிறாடியது - வயிறிருக்கும்
தொப்புள் ஆடியது ;
தொப்புள் உள்ளிருக்கும்
செல்லாடியது - செல்லிருக்கும்
திசுவாடியது - திசுவிருக்கும்
தசையாடியது - தசையிருக்கும்
நாராடியது ;

"அசை" என்றால் நகராமல் அசைந்தது !!
"நகர்" என்றால் அசையாமல் நகர்ந்தது !!

மொத்தத்தில் சபையோடு
நாட்டியம் விளையாடியது ;

அன்று முதல் என்னிடுப்பை
கண்களால் மொய்த்தவரும்
இதழ்களால் தைத்தவரும்
ஏராளம் ஏராளம் !!

நல்ல வேளை
ஒரு மாறுதலுக்காக
எல்லாரும் என்
இடையையே பார்த்தனர் - சற்று
மேலே பார்க்காமல் !!

அன்று முதல்
ஆடுகிறேன் ஆடுகிறேன்
ஆடிக் கொண்டே இருக்கிறேன்

சனத்தை நினைத்து - விமர்
சனத்தை மறந்து ;

வயதிருக்கும் வரை ஆடுவேன் ;
வயது போனால் ?

அப்போது பார்த்துக்
கொள்ளலாம் ;

இப்போதைக்கு இது
போதும் ;

சுபம் ;

Wednesday, February 1, 2012

மனைமாட்சி


எத்தனையோ பார்த்ததுண்டு
எங்கெல்லாமோ போனதுண்டு
ஆனால்
இவ்விடத்தைப் போல் - வேறு
எவ்விடத்தையும் கண்டதில்லை ;

இது
எல்லோரும் விரும்பும் இடம் ;
எல்லோரும் திரும்பும் இடம் ;

அது வேறேதுமல்ல ;

முனை தோறும்
முளைத்த மருத்துவ
மனை தானது ;
ஒரு வகையில்
நமக்கு எல்லாம்
அனை தானது ;

கட்டிலில் இருவர்
விழுந்ததால் நாம்
தொட்டிலில் விழுந்தோம் ;

அது பிடிக்காமல்
அதனின்றும் விழுந்தோம் ;

பின் தவழ்ந்து
மறுபடியும் கட்டிலிலேயே
விழுகிறோம் ;

இடையில் எத்தனை
ஆட்டம் ?

கடலில் ஆடும்
கப்பல் ஆட்டம் ;

ஒரு சின்ன
ஓட்டை போதாதா
நம்மை விழுங்க !!

எத்தனை பேர்
இங்கே கரை கண்டார் ?
கரையைக் காணாது
இருப்பதில் தானே
கரை கண்டார் !!

மொத்தத்தில் கட்டிலிலும்
தொட்டிலிலும் விழுகின்ற
விட்டில்கள் நாம் ;

குழந்தையாய்ப் பிறக்கிறோம் ;
குழந்தையாய் இறக்கிறோம் ;

எல்லாம் இந்த
மனையில் தானே ?

பிறக்கும் போது
இருந்த உடைகள்
தானே நமக்கு
இறக்கும் போதும் ;

குழந்தையாய்ப் பிறக்கையில்
முகம் களிப்பார் ;
குழந்தையாய் இறக்கையில்
முகம் சுளிப்பார் ;

பிறவி எடுத்த
பின்னே எல்லோரும்
"கரு" வி ஆகிறோம் - அந்த
கருவத்தைக் கல்லுவது
இந்த மனைவாழ்
கருவிகள் தானே ?

நம் ஆரம்பம் பிள்ளைத்தாய் ;
நம் அஸ்தமனம் வெள்ளைத்தாய் ;

மனிதனைக் காக்க
பணம் வேண்டும்
என்று சொன்ன
இம்மனை ஒரு
செம்மனை தானே ?

இங்கே என்ன இல்லை ?
இங்கே ஏது எல்லை ?

ஆனந்தமும் இங்கே
அவஸ்தையும் இங்கே ;

முதலும் இங்கே ,
முடிவும் இங்கே ;

முட்டி மோதினால்
இவை இரண்டு
தானே வாழ்க்கையில் ;

ஆதலால் இந்த
மனையை விட்டு
எங்கே போவது ?

நமக்கும் அதற்கும்
தீராத உறவு - என்றும்
மாறாத உறவு ;

இவ்வாறெல்லாம் சிந்தித்துக்
கொண்டே தெருவில்
நடந்து போய்க்
கொண்டிருந்தேன் ;

ஒரு மருத்துவமனை
வந்தது ;

என்
முறை வந்தால்
தவறாமல் அழை
என்று சொல்லி
விட்டு வந்தேன் ;