Saturday, December 22, 2012

ஒருநாள் போடியிலிருந்து ஓய்வு பெறும் சச்சினுக்காக...

சாதனை மன்னனே,
கிரிக்கெட்டின் கண்ணனே ,

ஒருநாள் போட்டியிலிருந்து
ஓய்வு பெறப்போவதாகக்
கூறிவிட்டாய் ;

நீ ஓய்ந்து போனாலும்
நீ அடித்த ஷாட்டின்
அலை ஓய்ந்து போகுமா ?

நீ பாட்டிங் ஆடி
பந்தாடும் காட்சி
ரசிகனின் மனதில்
நிலை மாறிப் போகுமா ?

உன்னோடு தானே
நாங்கள் வளர்ந்தோம் - நீ
எங்கெங்கு போனாயோ
அங்கங்கு போனோம் ;

பள்ளிக்குச் சென்றாலும்
பரிட்சைகள் எழுதினாலும்
நான் வாங்கும் ஸ்கோரை
ஒருபோதும் மதிக்காமல்
நீ வாங்கும் ஸ்கோரையன்றோ
முப்போதும் மதிப்போம் !!

இருநூறு எடுத்தாலும்
இருபது ரன் எடுத்தாலும்
கடவுளைப் போலுன்னைக்
கும்பிட்டு நிற்போமே !!

இந்தியாவின் 29 ஆவது
மாநிலம் நீயல்லவா !!
எல்லா மாநிலமும்
நீயே அல்லவா !!

நாட்டின் ஆசையெல்லாம்
உன்னாசை தானே !!!
உன்னாசை எல்லாம்
நாட்டாசை தானே !!!

விளையாடும் போது
உனக்கு இந்தியா தொப்பி ;
விளையாட்டில் நீயே
இந்தியாவின் தொப்பி ;

விளையாடும் போதும்
விளையாடா விட்டாலும்
அந்தத் தொப்பி
இறங்கு வதில்லை ;

நீருள்ளவரை, நிலமுள்ளவரை,
வாழ்க நின் நாமம் !!
வளர்க நின் புகழ் !!

ஐந்துநாள் போட்டியில்
மீண்டும் சந்திப்போம் ;

Thursday, December 20, 2012

நாகமாணிக்க வேட்டை – 2 – வேலன் புறப்பட்டான்

ஆனைமலை தன்னில் 
ஆனைபலம் கொண்ட 
வீரப்புகழ் மிக்க
வேலன் வாழ்ந்தான்

நாகலோகம் சென்று
நங்கையொருத்தி கொண்டு
நாடு திரும்பிவர
ஆசைப் பட்டான்

ஆறு மாதங்களில்
ஆறு தனைக்கண்டு
நங்கையோடு வர
அன்னை சொன்னாள்

ஆறு மாதங்களில்
ஆறு இல்லையெனில்
வேறு வேலையிலை
வருக என்றாள்

அன்னை சொன்னமொழி
வேதமென்று அவன்
ஆனைமலை விட்டு
தூரம் போனான்

சோலைமலை சென்று
காளி கோவில் கண்டு
உண்டு குடித்தவன்
தூங்கிப் போனான்

பகல் எனக்கொரு
இகல் எனும்படி
புகல் இடந்தேடி
இருளும் வந்தான்

இருள் தனக்கொரு
பொருள் தரும்படி
அருள் ஒளிகொண்டு
நிலா வந்தாள்

நிலா தனக்கொரு
கனா எனும்படி
பலா போன்றதொரு
பாவை வந்தாள்

வீர வேலனவன்
தூக்கம் கெட்டான்
பாவை பார்த்துவிட
ஆசைப் பட்டான்

வேலிருந்தும் வந்த
தூக்கம் தன்னை
வீறுகொண்டு அவன்
வெல்ல வில்லை

தூணின் மறைவிலவன்
ஒளிந்து கொண்டான்
காண அரியதோர்
காட்சி கண்டான்

காளி தனைக்கண்டு
பக்தி மிகக்கொண்டு
பாத மலர்தொட்டு
பூசை செய்ய

தங்கப் பழங்கொண்டு
தங்க மலர்கொண்டு
தங்க விளக்கோடு
தங்கம் போலே

தங்கக் குடத்தோடு
தண்ணீர் கொண்டுவர
அருகி ருந்தவொரு
வாவி சென்றாள்

தண்ணீர் பட்டவுடன்
பன்னீர் மங்கையவள்
தங்கக் குடமங்கு
மூழ்கிப் போக

பூசைத் தட்டையவள்
நீரில் முங்கியதும்
பூசைத் தட்டுமுடன்
மூழ்கிப் போக

தண்ணீர் பார்த்தவள்
கண்ணீர் விட்டாள்
அப்பு நீரிலவள்
உப்பும் போட்டாள் 

அழுகை வேலனவன்
நெஞ்சில் பாய
அழகு தேவதையின்
அருகில் போனான்

பெண்ணே உன்
பேரென்ன என்றான் 
விடையொன்று தான்
கேட்க நின்றான்

பொன்மாலை நேரமும்
போன பின்பு
பொன்மாலை போலங்கு
வந்த பெண்ணும்

பொன்மாலை என்
பேர் என்றாள் ;
தேவலோகம் என்
ஊர் என்றாள் ;

"மனிதர் யாவரும்
பார்க்கா வண்ணம்
பூசை செய்யவே
இரவில் வந்தேன் ;

ஒவ்வொரு நாளும்
குடமும் தட்டும்
குளம் தொட்டதும்
மூழ்கிப் போகும்

மாயம் யாதெனத்
தெரிதல் இன்றி
காயம் மேவிட
கரையில் நின்றேன்

காளி தேவிக்கொரு
பூசை செய்ய
பாவி எனக்கொரு
வழியும் இல்லை"

என்று பாவையவள்
கண்கள் பனித்தாள் ;
கண்கள் பனித்ததும்
வேலன் பணிந்தான் ;

குளத்துக் குள்ளே
நானும் சென்று
பொருள் யாவையும்
கொணர்ந்து வருவேன்

அதுவரை கரையில்
இருங்கள் என்றே
அவனும் உடனே
குளத்தில் குதித்தான் ;

குளத்துக் குள்ளே
கும்மிருட் டிருந்தும்
மீனைப் போலவன்
நீச்சல் செய்தான் ;

சற்று நேரத்தில்
ஒளிகோடி வெள்ளம்
கண்களைத் தின்னும்
காட்சி கண்டான் ;

ஒளியை நோக்கித்
தானும் சென்றான் ;
ஒளியைக் கண்டதும்
ஒளிமயம் ஆனான் ;

அந்த ஒளி
தெய்வ ஒளி ;
அருளைப் பாய்ச்சும்
காளி ஒளி ;

கரையில் கண்ட
காளி கோவில்
நீரின் அடியில்
இருத்தல் கண்டு

உள்ளம் உடலம்
சீவன் எல்லாம்
தன்னால் அங்கே
உருகக் கண்டான்;

தீயில் பொருட்கள்
உருகு வதுண்டு ;
நீரில் பொருட்கள்
உருகு வதுண்டோ ?

ஆனால் வேலன் 
மனிதன், எனவே
நீரில் அவனும்
உருகிப் போனான் ;

கோவில் உள்ளே
அவனும் போக
மலரின் வாசம்
வீசப் பெற்றான் ;

நீருக் குள்ளே
சுடரும் விளக்கை
கண்கள் விரியத்
தானும் கண்டான் ;

காளியின் சிலையை
கண்ணில் கண்டு
"அம்மா " என்றே
பாதம் தொட்டான் ;

காளி மகிழ்ந்து
காட்சி தந்தாள் ;
வேலன் சிரத்தைத்
தாழ்த்தி நின்றான் ;

"வேலா உன்னால்
உள்ளம் மகிழ்ந்தோம் ;
சேவை குணங்கண்டு
நாமும் நெகிழ்ந்தோம் ;

என்னருள் உனக்குக்
கூடி வரும் ;
தருவேன் உனக்கு
இரண்டு வரம் ;"

என்று காளி 
கனிந்து சொன்னாள் ;
வேலன் உடனே
பணிந்து சொன்னான் ;

"கரையில் அங்கே
கன்னி ஒருத்தி
உன்னைப் பூசிக்க
உள்ளம் கொண்டாள் ;

அவளுக் கொருவழி
நீயும் சொன்னால்
ஆறுதல் எனக்கு
உண்டு என்றான் "

காளி உடனே
அவனைப் புகழ்ந்து
நல்ல தாயொரு
வார்த்தை சொன்னாள் ;

"ஆடம் பரங்கள்
ஆகா தெனக்கு
அன்பு ஒன்றையே
நெஞ்சில் கொண்டு

அம்மா என்றெனை
அழைத்தால் போதும்
அக்கணமே நான்
வருவேன்" என்றாள் ;

வேலன் உடனே
உவகை கொண்டு
இரண்டாம் வரத்தை
கேட்க லுற்றான் ;

"நாகலோகம் சென்று
இளைய அரசியை
நானும் கொண்டு
நாடு திரும்ப

அன்னாய் நீயொரு
வழி சொல்வாய் ;
நீயே என்
சரணம்" என்றான் 

"விடிந்த உடனே
மேற்கில் போ, 
கண்ணில் தெரியும்
புற்றைக் காண்,

புற்றின் வழியே
நடந்து சென்றால்
நாக லோகம்
நீயம் போகலாம்


ஆனால் அதற்கொரு
பாம்பாக வேண்டும்
பாம்புகள் மட்டும்
அவ்வழி போகும்

நான் உனக்கொரு
மாத்திரை தருவேன் 
மாத்திரை உண்டால்
பாம்பாய் ஆவாய்

ஒருமணி நேரம்
மட்டும் தான்
மாத்திரை அது
வேலை செய்யும்

ஆதலின் நீயும்
அதையே உண்டு
கானகம் நீங்கி
வானகம் போவாய்"

என்று காளி
நல்வழி சொன்னாள் ;
வேலன் கேட்ட
இருவரம் தந்தாள் ;

காளி அன்னையின்
பாதம் தொட்டு
வேலன் அவளின்
இன்னருள் பெற்று

மேற்குத் திக்கை
நோக்கிப் போனான்
போன பின்பு
என்ன ஆனான் ?
































Thursday, December 13, 2012

யார் எழுதிய பாடல் ?

இந்தப் பாடல் நற்றாயிரங்கல் என்னும் துறை. தன் மகள் காதல் துன்பத்தால் வருந்துவது கண்ட தாயொருத்தி மனம் தாளாமல் பாடும் வகையில் இப்பாடல் அமைந்துள்ளது. 

நான் கொடுக்கும் இந்த விளக்கம் அமரன் கதை என்ற நூலில் பாரதியின் பேத்தி விஜயா பாரதி எழுதியது.

பாடல் : 

கவுண்டவுண்ட தெனமாரன் கணைபொழிய
மிகச்சோர்ந்து கண்ணீ ராற்றிற்
கவுண்டவுண்ட மார்பினளாய் மகளுன்னை
நினைந்துமனங் கரையா நின்றாள்
கவுண்டவுண்ட சீதையினை மாலையிட்ட
பெருமானே கவுண்ட  னூரிற்
கவுண்டவுண்ட ராமசாமித் துரையே
விரைவில் கலவி செய்யே

பாடல் வகை : யமக அறுசீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தப்பா


கவுண்டவுண்டதென = இதைக் கவுண்  தாவுண்டது என எனப் பிரிக்க வேண்டும் . அதாவது , கவுண் கற்கள் தாவி வருவது போல. இதில் கவுண்டாவுண்ட என்றிருக்க வேண்டியது குறுக்கல் விகாரத்தால் கவுண்டவுண்ட என்று ஆனது.

மாரன் = மன்மதன்

கணைபொழிய = கணைகளைப் பொழிய, மலர் அம்புகளைப் பொழிய

(கவுண் கற்களைப் போல் மலர் அம்புகளைப் பொழியும் மன்மதன்)

மிகச்சோர்ந்து = மிகவும் சோர்ந்து

கண்ணீராற்றில் = கண்ணீர் என்னும் ஆற்றில்

கவுண்டவுண்ட மார்பினளாய் = கவ்வுண்ட, உண்ட மார்பினளாய் 

கவ்வப்பட்ட, உருண்ட மார்பினை உடையவளாய் . இங்கே கவ்வுண்ட என்பது விகார விதியால் கவுண்ட என்று ஆனது. உருண்ட என்பது தொல்காப்பியத்தின் கெடுதி அதிகார விதிப்படி உண்ட என்று ஆனது. 

மகள் = இதற்குப் பொருள் சொல்ல வேண்டியதில்லை.

உன்னை நினைந்து மனம் கரையா நின்றாள் = இங்கே கரைய என்பது கரையா என்று ஆனது.

கவுண்டவுண்ட சீதையினை = இதை, கா உண்டு, அவ்வுண்டு, அ சீதையினை என்று பிரித்துப் படிக்க வேண்டும்.

இலங்கையில் ஒரு கா உண்டு. கா என்றால் சோலை. இங்கே அசோகவனம். உண்டு என்றால் இங்கே இருந்த என்ற பொருள். அவ்வுண்டு என்றால் , அந்த இடத்திலே இருந்த என்று பொருள்.இங்கே காவுண்டு என்பது கவுண்டு என்று குறுகியது. 

அ - அந்த, சீதையினை - சீதா தேவியை

(அசோகவனத்தில் இருந்த சீதையை)

மாலையிட்ட பெருமானே = சீதா தேவியின் நாயகனாகிய , ராமனுக்கு நிகரானவனே

(எட்டயபுர மன்னனின் பெயர் ராமசாமித்துரை. இங்கே கடவுளும், மன்னனும் ஒன்றாக பாவிக்கப்படுகிறார்கள். பெயர் ஒன்றாக இருப்பதாலும், குணப்பெருமைகள் சமமாக இருப்பதாலும் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. மேலும், வேதங்களின் கூற்றுப்படி அரசன் மகாவிஷ்ணுவின் அவதாரம். இராமனும் மகாவிஷ்ணுவின் அவதாரம்)


கவுண்டனூரில் = கவுண்ட மா நகரில்

கவுண்டவுண்ட ராமசாமித்துரையே = கவுண்ட வம்சத்தில் உதித்த ராமசாமித்துரை மன்னனே. இங்கே உண்ட அறுசுவை உணவுகளைச் சாப்பிடுகிற மன்னனே.

(எல்லோரும் உண்பதைப் போலல்லாமல் தேவர்களைப் போல் அரிய உணவு வகைகளை உண்ணும் மன்னன் என்பதற்காக உண்ட என்ற சொல் போடப்பட்டிருக்கிறது)

விரைவில் கலவி செய்யே - கூடிய சீக்கிரம் என் பெண்ணோடு ஒன்று சேர்க.

பி.கு = இப்பாடல் சுப்பையாவை சுப்பிரமணிய பாரதியாராக மாற்றிய பாடல்.  இதற்குப் பிறகு தான் என் தாத்தாவிற்கு பாரதி என்ற பட்டம் கிடைத்தது.





Saturday, December 1, 2012

1. ஒளியில் ஓர் இருள்


யாருமே இல்லாத மொட்டை மாடியில்
காற்று மட்டுமே சடுகுடு பாட
பாறை போலே அசையா திருந்து
ஊரை எல்லாம் நோட்டம் விட்டான்
ஊறிச் சலித்த உத்தமன் ஒருவன்

வைர நகைகளை தூவென்று தள்ளி
கறுப்பு நிறத்து வான அவையில்
மேகத் தாதியர் வழிவிட்டு நிற்க
தேகம் முழுதும் பளிச்சென்று சுடர 
தெள்ளென்று வந்தாள் வெண்ணிலா ராணி
வீணை இல்லாத வெள்ளை வாணி
நிலா ராணியென்று பெயருற்ற போதும்
நின்றவாறே அவள் கோலோச்சி நின்றாள்
சட்டென்று வந்தது ஒளிகோடி வெள்ளம்

மேலே பார்த்தது போதுமென் றெண்ணி
மேலே இருந்து நகரைப் பார்த்தான்
காதல் கதையின் கவிதை நாயகன்

வண்ண வண்ணப் பொடிகள் போல
வெள்ளை பச்சை சிவப்பு மஞ்சள் 
தங்கம் வைரம் வெள்ளி என்றே
பற்பல நிறத்தில் ஒளிர்ந்தன விளக்குகள்
பற்பல  வகையில் தெறித்தன ஒளிகள்

நகரை விழியால் நகர்ந்து பார்த்தவன்
எதிரே நின்ற சாலை விளக்கை
ஓரிரு நொடிகள் வெறித்துப் பார்த்தான்
நீண்ட உடலுற்ற மின்மினி ஒன்று
விட்டு விட்டு ஒளிர்தல் போலே
முணுக் முணுக்கென்று எரிந்தது விளக்கு
விட்டு விட்டது எரிந்த போதும்
அந்த ஒளியையும் விட்டி ல்லாமல்
வந்து நெருங்கின விட்டில் பூச்சிகள்
விட்டிலை விட்டிலை காதல் பூச்சுகள்

சாலை விளக்கை வெறித்த பின்பு
காலை வருடிய கறுப்புப் பேசியை
கையில் எடுத்து உற்றுப் பார்த்தான்
தையல் கிழிந்த நெஞ்சைக் கொண்டோன்

பேசி எடுத்தவன் பேச்சற்றி ருக்கையில்
பேசி இடத்திலும் பேசியது ஒளி
பேசி பார்த்ததும் வீசியது வலி
வளியைப் போலே வலியும் வீசிட
பேசிகொண்டு தினம் பேசிப் பார்த்தவன்
பேசி பார்க்காது வீசி எறிந்தான்
விழுந்த இடத்திலும் விழுந்தது ஒளி

தென்றல் வந்து தீண்டிய பின்னே
மரமே மெதுவாய் ஆடி நிற்கையில்
ஆடாதி ருக்குமோ சின்னப் பூச்செடி  ?

அஃதே போல,

தன்னைச் சுற்றிலும் விளக்குகள் எரிய
அவனின் மனதிலும் விளக்கொன்று எரிந்தது

அந்த விளக்கு எந்த விளக்கு ?
கறுப்பை உமிழும் கறுப்பு விளக்கு

வானில் தெரியும் வெள்ளி நிலாவும்
மாதம் ஒருநாள் மறைந்து போகும்
தெருவில் எரியும் வண்ண விளக்கும்
மின்விசை சொன்னால் அணைந்து போகும்

ஆயின்,

அவனின் மனதில் எரிந்த விளக்கோ
அணையா தவனை ஆக்கிரமித்து
ஹாஹா ஹாஹா ஹாஹா வென்றே 
பேயைப் போலே வெடித்துச் சிரித்து
அவனை முழுதாய் ஆட்டிப் படைத்தது
ஓயாத வனை வாட்டி வதைத்தது

பொத்தான் இல்லை எந்திரம் இல்லை
எதுவும் இல்லை விளக்கை அணைக்க

அணைந்து போயென்று சீறிய போதும்
அணைந்து விடேனென்று கெஞ்சிய போதும்
சொல்லிய சொல்லை கேட்கா வண்ணம்
வண்ணம் இன்னும் கூட்டிய வாறு
ஒளிகூடி நின்றது கறுப்பு விளக்கு

அவனின் இதயம் தவித்துத் தவித்து
தவிப்பிற் கேயோர் எல்லை கடந்து
ஆயிரம் சில்லாய் சிதறிப் போனது

சில்லு சில்லாக சிதறிய போதும்
துண்டு துண்டாக உடைந்த போதும்
சில்லில் துண்டில் சின்னஞ் சிறிதாய்
சிரித்து நின்றது கறுப்பு விளக்கு
பொறுப்பு தவறா சிறப்பு விளக்கு

இனிமேல் எதையும் தாங்கும் எண்ணம்
எனக்கு இல்லை என்றே சொல்லி
புயலில் பெயரும் மரத்தைப் போலே
அவனும் உடனே மண்ணில் சாய்ந்தான் 

சுற்றி எங்கிலும் ஒளிமழை பெய்ய
சுற்றி அவனைச் சூழந்து நின்று
பாழும் இருட்டு கவிந்து வந்தது
கறுப்புக் குழம்பாய் குவிந்து வந்தது

- தொடரும்

Wednesday, October 31, 2012

யார் அவன் ?


                                          

பெண்ணில்  அழகாய்க் கருவாகி
பென்னம் பெரிய தொன்றாகி
மண்ணில் வந்த மனிதர்கள்
மறைத்து வாழும் பொருளாகி
கண்ணில் எளிதில் தோன்றாமல்
கரத்தில்  கடிதில் சிக்காமல்
எண்ணில் அடங்கா மேகம்போல்
ஏகம் தன்னைச் செற்றிடுவான்

தேயும் நிலவைப் போலிருந்து
தளர்ந்தே பின் வளர்ந்திடுவான்
பாயும் வெள்ளம் போலாகி
பரந்து விரிந்து திரிந்திடுவான்
வீயும் எண்ணம் இல்லாமல்
வீரம் கொண்டே விளங்கிடுவான்
மாயும் வரையில் நச்சியதை
மறதி இலாது காத்திடுவான்

ஆசை என்னும் கடலினிலே
அல்லும் பகலும் முங்கிடுவான்
பூசை போலே மேலேறி
புவியில் நிதமும் தாவிடுவான்
தூசை வாரித் தலைமேலே
தூக்கிப் போடும் வேழம்போல்
மாசை மறுவை மட்டின்றி
மார்போ  டணைத்து மகிழ்ந்திடுவான்
இன்பம் வந்து சூழ்கணத்தில்
இசைக்கும் குழல்போல் மாறிடுவான்
துன்பம் ஆங்கு மேவிடவே
துவைக்குந் துணிபோல் ஆகிடுவான்
அன்பை அறனை அழித்தொழித்து
அற்பப் பதராய் அழிந்திடுவான்
பொன்னும் பொருளும் அள்ளிவந்து
போதா தென்றே வாழ்ந்திடுவான் 

பணியா திந்த உலகினிலே
பலவாய் வினைகள் செய்துவந்து
அணியா திருக்கும் அணிகலனாய்
அழகாய்  நம்மை அலங்கரித்து
தணியா தென்றும் தானிருந்து
தானாய் என்றும் செயல்பட்டு
பிணியாய் இனிதே உருமாறி
பிணைத்துக் கொல்லும் உள்ளமவன்

Monday, October 29, 2012

எட்டே கால் - ஒரு கதைக் கவிதை


வெளியே வெப்பத்தையும்
உள்ளே தட்பத்தையும்
தந்து கொண்டிருந்தது ஏசி ;

உள்ளே வெப்பத்தையும்
வெளியே தட்பத்தையும்
தந்து கொண்டிருந்தது என் நாசி ;

ஏழரைக்கு வருவதாய்
சொல்லியிருந்த  நண்பன் - பிறகு
தள்ளிப்போட்டு தள்ளிப்போட்டு
ஏழரையை எட்டாக்கி
எட்டை எட்டே காலாக்கினான் ;

அதைச் சொல்ல
செல்லில் இரண்டு 
மூன்று காலாக்கினான் ;

அது நவ
நாகரிக இளைஞர்
மொய்க்கும் காப்பித்தோட்டம் ;

எல்லோரும் வந்தனர் 
ஜோடியாக ;
நான் மட்டும் நின்றேன்
தனியாக ;

வயதான காவலரும்
வயதாகாத காற்றுமே
எந்தன் துணைகள் ;

என் செய்வதென்று
தெரியவில்லை ;

எட்டே கால் அடிக்க - இன்னும்
எண்பது நிமிடங்கள்
இருந்ததால் என்
இரண்டே கால்
கொண்டு அங்கும்
இங்கும் உலாவினேன் ;

அலைந்த மனது 
உலைந்தது ;

உலைந்த மனது
அலைந்தது ;

அருகிலிருந்த படிக்கட்டில்
சிறிது உட்கார்ந்து - கொஞ்சம்
நேரத்தைத் தின்றேன் ;

பிறகு செல்லுக்குள்
சென்று விளையாடி - கொஞ்சம்
நேரத்தைக் கொன்றேன் ;

ஆமையாக ஊர்ந்த
நேரம் திடீரென்று
ஓட்டுக்குள்ளே தன்னை 
இழுத்துக் கொண்டது ;

அய்யகோ என்றேன் ;

பின் மறுபடியும்
வெளியே வந்து
வழக்கம் போல்
ஊரத் தொடங்கியது;

அது ஊரினும்,
என்னுள்ளே - மெல்ல
மெல்ல சலிப்பு
ஊறத் தொடங்கியது;

எட்டே காலுக்கு
இன்னும் அறுபது 
நிமிடங்கள் இருந்தன ;

எதிரே பார்த்தேன் ;

ஒரு தனியார்
வங்கியின் ஏ.டி.எம் இருந்தது ;

அருகிலேயே ஒரு
தனியார் பிச்சைக்காரன் இருந்தான் ;

காண்பதற்குச்  சிரி(ற)ப்பாக இருந்தது ;

சாலையில் வாகனங்கள்
அதிகமாக இருந்தன ;

மனிதர்கள் குறைவாகவே
இருந்தார்கள் ;

அது
மாலை இரவாக
மாறிக் கொண்டிருந்த
நேரம் ;

கறுப்புப் போர்வையைப்
போர்த்துக் கொண்டிருந்தது
வானம் ;

அந்த 
வானத்தைப் பார்த்தேன் ;
உடுக்கள் சிரித்தன ;
நானும் பதில் சிரித்தேன் ;

யாருக்கும் காத்திராமல்
மேகங்கள் சென்று
கொண்டே இருந்தன ;

மேகத்துக்குச் செல்லும்
நேரம் என்
தேகத்திற்குச் செல்லவில்லையே
என்று அயர்ந்தேன் ;

அயர்வு போனதும்
பூமியைப் பார்த்தேன் ;

பூமியைக் காலாரக்
கண்டதுண்டு - ஆனால் 
அப்போது தான் 
கண்ணாரக் கண்டேன் ;

பூமிக்கும் நமக்கும்
எத்தனை தடைகள் ?!!

சாலை மட்டுமா ? 
நம் காலை 
அலங்கரிக்கும் செருப்பும் 
அல்லவோ தடை ?

எட்டே காலடிக்க
இன்னும் நாற்பது
நிமிடங்கள் இருந்தன ;

காற்று வீசிப்
பார்த்திருக்கிறேன் - அன்று
தான் காற்று
பேசிப் பார்த்தேன் ;

என்ன அழகாகப்
பேசியது தெரியுமா ?

பாவம், காற்றுக்காக
யாரும் நேரம்
ஒதுக்குவதே இல்லை ;

அதனால் அன்று
நான் ஒதுக்கினேன் ;

காற்று நம்மை
ஒதுக்கி விட்டால்
என்னாகுமென்று யோசித்தேன் ;

அதிர்ந்து போனேன் ;

காற்றுக்குக் கால்
என்றொரு பெயருண்டு ; என்னோடு
பேசியதால் அதற்கு
வாய் என்று பெயர் வைத்தேன் ;

எட்டே காலடிக்க
இன்னும் இருபது
நிமிடங்கள் இருந்தன ;

சன்னமாக சில
காகங்களின் குரல்
கேட்டது எனக்கு ;

நீ இரவில் 
கூட கரைவாயா ?
என்று வியந்தேன் ;

அதன் கூட்டுக்குள்
என்ன நிலவரமோ ?

"கூட்டுக்" குடும்பம் 
என்றாலே பிரச்னை
தான் போலும் ;

சற்று மேலே
பார்த்தேன்;

சடசடவென்று ஒரு 
வெளவால் பறந்தது ;

பின்னாடியே போனேன் ;

கொஞ்ச தூரத்திற்குப்
பிறகு ஒரே கும்மிருட்டு ;

அது போய்விட்டது - என்னால்
போக முடியவில்லை ;

வெளவால் பெரிய 
திறமைசாலி தான் ;

இருட்டு வந்தாலே
பயம் மனிதர்க்கு ;
இருட்டு வந்தாலே
ஜெயம் வெளவாலுக்கு ;

நம்மைச் சுற்றி
எத்தனை அற்புதங்கள் ;

மனிதனுக்கு மேலே
எத்துணை அதிசயங்கள் ;

அக்கணத்தில் அப்படியே
ஓரெண்ணப் பெருவெளியில்
தொலைந்து கொண்டிருந்தேன் ;

அவ்வமயம் நண்பன் 
"பாம் பாம்" என்று
ஹாரன் அடித்து
"ஹாய் மச்சி
சாரி டா 
கொஞ்சம் லேட்டாயிடுச்சு " 
என்று சொல்லி 
வண்டியிலிருந்து இறங்கினான் ;

அய்யய்யோ,
எட்டே கால்
வந்து விட்டதே
என்று உடைந்து போனேன் ;

Monday, October 22, 2012

எழுத்து


தொலை தூரத்திலிருந்தே
என்னைத் தாக்கினாய் - அதனால்
நீ ஆயுத எழுத்து ;


தாக்கி ,
இரு கண்ணால் சுட்டாய் - அதனால்
நீ சுட்டெழுத்து ;


சுட்டு, 
ஒரு கணத்தில்
உயிரோடு உயிரானாய் - அதனால்
நீ என் உயிரெழுத்து ;

விடக் கூடிய எழுத்தா நீ ?

உனை எழுத
எங்கு கிடைத்தது 
அந்தக் கடவுளுக்கு
ஒரு எழுத்தாணி ; 


ஆதலால் சற்று
யோசித்தேன் - நீ தான் 
எனக்கு நல்ல துணையெழுத்து ; 
எனை நீங்காத இணையெழுத்து ;

தனியெழுத்தாய்  நான் நின்றேன் ;
நீ வந்தாய் ;
நான் ஒரு சொல்லெழுத்தானேன் ;
உன் செல்லெழுத்தானேன் ;

நீ என்ன என் ஒற்றெழுத்தா 
கண்டு கொள்ளாது இருக்க ;
நீ என் காலெழுத்து அன்றோ
கண்டு கொண்டே இருக்க - கண்டு
நீண்டு கொண்டே இருக்க ;

நீ, ஒரு எழுத்து ;
நான் ஒரு எழுத்து ;
நீ நானானால்
நான் நீயானால்
ஓரு எழுத்து ஈரெழுத்து - இல்லை,
ஈரெழுத்து ஒரு எழுத்து ;


ஒன்று சொல்கிறேன் கேள் :

சின்னதாய் இருக்க
என் காதலென்ன குறிலெழுத்தா ?
இல்லை, அது நெடிலெழுத்து ;

கண்ணே !!
கடைசியாக ஒன்று,

எனைத் தலைகீழாக்கினாய் - 
அதனால் இனி
நீயே என் தலையெழுத்து 
தலையான  நிலையெழுத்து ;

Sunday, October 21, 2012

247 - அ முதல் ஃ வரை


காலை எழுந்து பல்லினைத் துலக்கி
இன்றைய பொழுது இனிதாய்க் கழிய
"அ" வை வணங்கினேன் ஓர் அதிகாலைப் பொழுதில் (அ - கடவுள்)
அடுத்த நிமிடம் வீதியில் , "ஆ"  மா என்றது (ஆ- மாடு)
சரி என்று, நாளிதழ் எடுக்க வெளியே வந்தேன்
ஓர் அதிசயக் காட்சியைக் கண்டேன்
அப்போது இராத்திரி ஆடிய வேட்டையினாலோ என்னவோ 
"இ" ஒன்று மரக்கிளையில் தூங்கிக் கொண்டிருந்தது (இ - ஆந்தை)
அந்த "இ" யை  "ஈ" ஒன்று  மொய்க்கவே, அவ்வி சிலிர்த்து பறந்தது
உடனே, "உ" மேல் எய்த அவ்விடம் அகன்றேன் - பின் (உ - வியப்பு)
வீட்டினுள்ளே "ஊ" தயாராகிக் கொண்டிருக்க(ஊ - உணவு) 
காலங் காலையில் தொலைக்காட்சி போட்டேன்ஓர் அலைவரிசையில் எ குஞ்சுகளோடு சுற்றியது, மாற்றினேன்  (எ - கோழி)  
இன்னோர் அலைவரிசையில் "ஏ"வை ஒருவன் எய்து கொண்டிருந்தான்  ( ஏ - அம்பு )
அதையே கொஞ்ச நேரம் பார்த்தவாறு  
"ஐ" யைக் கலந்து குளம்பி குடித்தேன் - குடித்ததும் (ஐ - சக்கரை) 
மறுபடியும் அலைவரிசை மாற்றினேன்,  "ஒ" ஒன்று அகவியது (ஒ - மயில் )
திரும்பவும் மாற்றினேன் "ஓ" வென்று பாடிக்கொண்டிருந்தார்  விக்ரம் (ஓ - வியப்புக்குறி, நடிகர் விக்ரமின் ஓ போடு பாட்டு)
மீண்டும் மாற்றினேன் ஒரு "ஒள" சுற்றியது , பிறகு சற்றே கண்ணயன்றேன் (ஒள - பூமி, ஒரு அலைவரிசையின் குறியீடு  )

பிறகு, என் "க" வில் அயர்ச்சி நீங்க எழுந்து தயாரானேன்  (க - உடல் )
டிராக் உடையை முழுக்க உடுத்தி    
பூங் "கா" விற்கு வந்தேன் வன்நடை பயில (கா - சோலை)
  "கி" என்றது ஒரு கிளி - உடனே
  "கீ" என்றது இன்னொரு கிளி - போட்டிக்கு 
  "கு" என்றது ஒரு குயில் - போதாதென்று 
  "கூ" என்றது இன்னொரு குயில் - அதைக்கேட்டு 
  "கெ" என்று முதலில் குறிலிலும் பின்பு(கெக்கே என்ற குழந்தை அழுவதாய் ஒரு கற்பனை)
  "கே" என்று நெடிலிலும் மிழற்றியது ஒரு குழந்தை 
   உடனே அதைக் "கை" யால் தூக்கினாள் அதன் அம்மா 
  "கொ" வென்றது குழந்தை மறுபடியும் -  அம்மா 
   அதட்ட "கோ" என்று  பெரிதாக அழுது பின் அடங்கியது (கோ - இரங்கல் குறி)
   அதைப் பார்த்து இலேசாக புன்னகைத்து
   சாலையோரம் கண்களை வலை  வீசினேன்
   கெள தின்னும் குதிரை, ஒரு வண்டியை இழுத்துப் பறந்தது(கெள - கொள்ளு)


அதிலே பறக்க நானும் ஆசை கொண்டேன்
அவ்வண்டியிலே ஏறி உலகெலாம் கண்டேன்
உவகை கொப்பளிக்க உலகெலாம் கண்டபின்
ஓரிடத்தில் இறங்கி சா வின் சாறு குடித்தேன்(சா - தேயிலைச் செடி)
குடித்து முடித்ததும் அருகிருந்த கோவிலுக்குச் சென்றேன்
கண்கள் பனிக்க "சி" யைப் பாடினேன்(சி - சிவன்)
"சி" யைப் பாடி பிரகாரம் சுற்றி
பூவை மேவும் "சீ" வைப் பாடினேன்(சீ - திருமகள்)
பாடிப் பரவி வெளியே வந்து
பாதணி எடுத்து காலில் அணிகையில்
அணிமையில் வந்து நாயொன்று மோந்தது
சு என்றேன், அப்படியே நின்றது(சு - விரட்டும் குறி)
சூ என்றேன், பயந்து சென்றது - அன்னணம் , (சூ - விரட்டும் குறி)
செள ஒருத்தி வந்து பூக்கூடை காட்டி(செள - சிறுமி)
வாங்கிக்கோ சாமியென்று கை கூப்பி இறைஞ்சினாள்
ஏகப்பட்ட சாமிகள் கோவிலுள் வீற்றிருக்க
ஏகனான என்னை சாமியென்று சொல்கிறாளே
என்றெண்ணி ஒருகணம் அப்படியே நின்றேன்
அவளை ஆற்ற இருமுழம் பூ வாங்கி 
ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டேன் - அப்போது
எந்தன் செயலை வழிமொழிவது போல்
வானமழையும் அங்கு "சோ"வென்று பெய்தது


"த" படைத்த இவ்வருமையான உலகிலே(த - நான்முகன்)
தா வென்று கேட்காமலே வருகிறதே சோனை
அடடா !! அடடா !! அற்புதம் !! அற்புதம் !!
சேனைத் துளி கொண்டு சோனை வந்ததால்
"தீ" ப்பிழம்பாம் சூரியனை மேகம் மறைத்ததே !!
அந்நேரத்தில்  நானோர் சக்கரவாகமாகி
மழைநீரை "து" வாய் வாயார உண்டேன் (து - உணவு)
அதனைக் காட்டிலும் "தூ" ஏதுமில்லை என்பதைக் கண்டேன் (தூ - தூய்மை)
மண் தேவை அறிந்து மழையை அளிக்கும்
விண் "தே"வை நினைத்து மெய் சிலிர்த்து நின்றேன் (தே - தெய்வம்)
ரோட்டிலே மனிதர்கள் ஏராளம் இருப்பினும்
பசுவனத்து கேகயமாய் தையென்று குதித்து
களிநடம் புரிந்து கழிபேருவகை கொண்டேன்
கொஞ்ச நேரத்தில் மழை விட்டது - ஆனால்
மழையை என்னால் விட முடியவில்லை
சிலையாய்ச் சமைந்து வானையே பார்த்தேன் - அப்போது
என் பின்னின்ற ஒருவர் தோ தோ என்று (தோ -  நாயை விரட்டும் ஒலி)
தன்  நாயை அழைத்து என்னருகில் வந்து
 "சார் கொஞ்சம் வழி விடுங்க போகணும்" என்றார்

வழி விட்டேன், அவர் தன்வழி போனார்
அவர் போனதும் நானும் என்வழி போனேன்
போகின்ற போது பா ஒன்று தோன்றியது(பா - கவிதை)
பாவை  நான் எழுதி முடித்ததும்
அதற்கு அழகாய் இசை சேர்ப்பது போல்
பிப்பீ என்றூதி மாட்டுக்காரன் வந்தான்
வீதியிலே  கச்சேரி செய்யும்  பாட்டுக்காரன் வந்தான்
என் பாவை அவன் இசையில்
கற்பனை செய்தேன், எப்படியிருக்கும் என்று
நாட்டுப்புறப் பாடல்கள் ஏராளம் இருந்தாலும்
ரோட்டுப்புறப் பாடலாய் என்பா இருக்குமென்று
மனதிற்குள் சொல்லி மனதிற்குள் சிரித்தேன்
என் சிரிப்பைத் தானும் கேட்டதோ என்னவோ
சாலைப் "பூ"வும் தன்னிதழ் விரித்து சிரித்தது
நடந்ததை எண்ணி அசைபோட்ட வாறே
நடையினை போட்டு வீட்டினை அடைந்தேன்
"ஏன் தாமதம் ?  நடைபயிற்சி சென்று
என்ன வெட்டி முறித்தாய்" என்று மனைவி கேட்டாள்
"மழையைக் கொஞ்சம் ரசித்தேன்" என்று சொன்னேன் - அதைஉனப்
பொருட்படுத்தாதவளாய் பையில் என்னென்றாள்
பிளாஸ்டிக் பூ என்றேன் !! புரியாமல் விழித்தாள்
மல்லிப்பூவை பிளாஸ்டிக் பையில் வாங்கியதால்
பிளாஸ்டிக் பூ ஈது என்று மொக்கை போட்டேன்
அய்யோ என்றலறி பையினைப் பறித்தாள்
பையைக் கூட பையப் பறிக்காமல் போகிறாளே
அவளின் மனதில் என்ன கோபமோ என்று யோசித்தேன் ;


அவளைத் தொடர்ந்து அடுக்களை சென்றேன்
"உன் கோபம் ரொம்பவே ந" என்றேன் 
"அப்படியென்றால் என்ன என்றாள் ?"
"ந என்றால் மிகுதி" என்றேன்
அவள் பதிலேதும் சொல்லாமல் அப்படியே நின்றாள்
" "நா"வை அடக்காமல் வார்த்தை சொன்னாயே
 உனக்கு "நி" யில் வெகுளி இருக்கக் கூடாது ( நி - அண்மை)
 நீ அப்படியிருந்தால் என் மனம் தாங்காது - ஆதலால்
சினத்தைப் போக்க "நு" செய வேண்டும் ( நு - தியானம்)
நிலவு குடியிருக்கும் அழகான முகத்தில்
கோபம் வந்தால்  "நூ" வெடிக்கும் ( நூ - எள் )​
எனவே, நை நை என்றிராமல்
கோபம் தவிர்த்து  "நே" வைக் கொடுத்தால்( நே - அன்பு)
"நொ"  நம் மனதை வாட்டாது ( நொ - துன்பம்)
"நோ" நம் உடலை அண்டாது ( நோ - நோய்)
மனிதன், ஒரு நெள மாதிரி( நெள - மரக்கலம்)
அதில் கோபம் என்றொரு பொத்தல் விழுந்தால்
நெள உடனே கவிழ்ந்து மூழ்கிப் போகும்"
என்று எனக்குத் தெரிந்த அறிவுரை கூறி
அவள் சினத்திற்கான காரணம் கேட்டேன் ;


"காலை எழுந்ததும் தூக்கம் கலக்க
காபியில் சீனி குறைவாய் கலந்துவிட்டேன்
அதைக் குடித்ததும் உன் அம்மா
ம வை  நெஞ்சில்  நிறைத்து வைத்து( ம - நஞ்சு)
மா வின் பெயரால் என்னை ஏசினாள்(மா - விலங்கு)
அகவையில் எனை விட மூத்தவள் அல்லவா 
என்னால் எதுவும் செய்ய முடியவில்லை
அதுவே உன்மேல் கோபம் மீ மிசை வந்ததென்றாள் ; (மீ - மேலே)
ஓ !! இவ்வளவு தானா சங்கதி என்று
ஆசை மனைவியின் அருகில் சென்று
"செல்லமே,
எம்மாவுக்கு இப்போது மூ க்காலம்(எம்மா - என் அம்மா, மூ - மூப்பு)
அதனால் இப்படி நடப்பது இயல்பு
இனியும் அப்பருவம் மே அடையாது (மே - மேம்பாடு)
ஆனவரை அம்மாவிடம் மே வாயிரு (மே - அன்பு)
ஆனது ஆகட்டும், போனது போகட்டும்
உனக்கு துணையாய் நானென்றும் உண்டு
மையில் தீட்டிய உன்னழகிய கண்கள்(மை - அஞ்சனம்)
மையல் ததும்ப புன்னகைக்க வேண்டும்
அதில் கண்ணீர் நித்தமும் கூடாது என்று சொல்லி - அவள்
கண்ணீர்த் துளியைச் சுண்டி எறிந்தேன்


அவ்வமயம், என்னவள் 
தன் கள்ளுண்ட இதழை இருமுறை மடித்து
காந்தி மதி போல சாந்தம் செறிந்து
தன்னழகிய கண்ணை "ய" மாய் விரித்து( ய - அகலம்)
என்னருகில் வா என்று சொல்லாமல் சொன்னாள் - அக்கணமே
அவள் பக்கம் பக்கம் பக்கம் வந்தேன்
வெட்கம் வெட்கம் வெட்கம் எனும்படி
வானில் பறக்கும் "வி" யின் சிறகாய்(வி - சிறகு)
அவளின் இமைகள் கிளைத்து நின்றன
என் கண்ணும் அவள் கண்ணும்
ஒன்றை ஒன்று தின்று கொள்ள
அவள் கண்ணிலிரிந்து காதல் "வீ" விழவே( வீ - வீழும் மலர்)
நான் தீயின் முன்னின்ற "வை" யாக ஆனேன் ( வை - வைக்கோல்)
அவள் கண்ணை விட  ஓர் "ஃ" உண்டோ உலகிலே 

Sunday, October 7, 2012

மழை தந்த மழை

நீல மலைச் சாரலை  
வெள்ளி மழை மேகங்கள் 
குறையேதும் இல்லாமல்
நுரையோடு குளிப்பாட்ட 

ஓராடை அணியாமல்
சுற்றிவரும் மென்காற்று   
நீராடை அணிந்து கொண்டு
அங்குமிங்கும் சுற்றிவர 

அம் மண்ணும் நாணத்தால்  
செம்மண்ணாய்  உருமாறி 
காற்றடித்த வேகத்தால்  
கல்கொண்டு கண் மூட 

கள்ளொன்று இருந்தாலும்
ஆடாத பனைமரங்கள்
காற்று வந்த தள்ளியதும் 
ஆனந்தக் கூத்தாட 

கால் கொண்ட மேகமாய் 
சிறகடித்த நாரையும்
தன் மனைவி பேர்சொல்லி
கூடுதேடி பறபறக்க

யானையையே விழுங்கும்
கரும்புத் தோட்டங்கள் 
பச்சைப் பசுங்கடலாய் 
வெகுதூரம் பரந்திருக்க 

ஆள் யாரும் உளரோ என்று 
அக்கம்பக்கம் பார்த்துவிட்டு 
ஆசைக் காதலியின்
வழவழப்புக் கன்னத்தில் 
சற்றேனும் தாமதியாமல் 
வாயழுந்த முத்தமிட்டேன் ;

Wednesday, October 3, 2012



காளமேகரின் சிலேடை "கள் " ளில் மதி மயங்கி அதன் தாக்கத்தில் நானும் வெண்பா வடிவில் சிலேடைகளை எழுதிப் பார்க்க ஆசைப்பட்டேன்.  

அதன் வடிவே இந்த சிலேடைகள். 


1.

சிக்காமல் சண்டையிடும் சிக்கியதும் கைகூப்பும்
அக்காலே கொண்டவர்க் காட்பட்டும்  - உக்கிரமாய்ச்
சாதலையே அவ்வுயிர்க்குத் தந்திடுமே ஆதலால்
காதலுக்கு நேராம் கரி

பொருள் :

யானையானது நமக்கு எளிதில் கட்டுப்படாது. அப்படிக் கட்டுப்பட்டால் நம்மிடம் அன்பாக இருந்து நன்றியுடன் இருந்து கைகூப்பும். பாகனுக்கு ஆட்பட்டும்  இருக்கும். ஆனால் திடீரென்று மதம் பிடித்து பாகனையே அழித்துக் கொன்று விடும். அதே போல் காதலும் நமக்கு எளிதில் வசப்படாது. வசப்பட்டாலோ நம்மிடம் வாஞ்சையாக இருப்பது போல் இருக்கும். அதற்குப் பின் பிரிந்து விட்டால் (Break - Up ஆனால் ) நினைவுகளால்  அது கொண்டவர்களையே  கொன்று விடும். 

2. 

வட்டமாய் வீற்றிருக்கும் வெள்ளிநிறம் பெற்றிருக்கும்
பட்டொளியில் நம்மெதிரே புன்சிரிக்கும் - திட்டமுடன் 
தந்திரமாய் தேய்ந்தழிந்து தான்வளரும் எப்போதும் 
சந்திரனும் சில்லறையும் தான் 


பொருள் :

நிலா வெள்ளி நிறத்தில், வட்டமாக வானத்தில் வீற்றிருக்கும்.  வெள்ளை பட்டு போன்ற ஒளியில் நமக்கு எதிரே புன்னகை பூக்கும். வளரும். வளர்ந்த பின் தேயும். அதே போல் சில்லறைக்  காசுகளும் (எல்லாக் காசும் அல்ல ) வெள்ளி நிறத்திலும், வட்டமாகவும் இருக்கும்.  நம் கையில் இருக்கும் இந்தக் காசானது கொஞ்ச நாள் மெல்ல மெல்ல வளர்ந்து ,பெருகி பிறகு திடீரென்று தேய்ந்து சுருங்கி அழிந்து விடும். பிறகு மறுபடியும் வரும். போகும். 

3.

வண்ணங்கள் கண்டிருக்கும் வட்டமுகம் கொண்டிருக்கும் 
கண்ணெதிரில் காம்புடனே காட்சிதரும் - திண்ணமுறப் 
பன்மடலாய்ப் பல்கரங்கள் பாங்குடனே பெற்றிருக்கும் 
மின்விசிறிக் கொப்பாம் மலர்   


பொருள் :

நம் வீட்டில் சுழலும் மின்விசிறி பல வண்ணங்களில் கிடைக்கும். வட்டமான முகத்தைப் பெற்றிருக்கும்.  விட்டத்திலிருந்து ஒரு பகுதி நீண்டு வர தொங்கிய படியே காட்சி அளிக்கும். பல கரங்கள் கொண்டு திகழும். அதே போல மலர்களும் பல வண்ணங்களில் இருக்கும். வட்டமான முகத்தைக் கொண்டிருக்கும். தன் விரிந்த மடல்களுடன்  காம்புடன் காற்றில் ஆடி அழகாகக் காட்சியளிக்கும்.  இந்த மடல்கள் தான் மின்விசிறியின் கரங்களுக்கு உவமையாக சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு மின்விசிறியைத் தூக்கிப் பிடிக்க எப்படி ஒரு Rod தேவைப்படுகிறதோ அதே போல பூவைத் தாங்கிப் பிடிப்பதற்கும் ஒரு காம்பு தேவைப்படுகிறது. இந்தப் பாடலில் பூவின் காம்பு மின்விசிறியின் Rod- க்கு உவமையாக சொல்லப்பட்டிருக்கிறது.

Thursday, September 27, 2012

அம்மானா சும்மாவா ?


எல்லார்க்கும் வணக்கம், 

என் COUSIN தங்கை மதுவந்தியின் முதல் குழந்தைக்கு அதிகாரப் பூர்வமாக நாளை மறு நாள் பெயர் சூட்ட இருக்கிறார்கள். அப்போது என் மடியில் குழந்தை உட்கார்த்தி பெயர் வைக்கப்படும்(தாய்மாமன் அல்லவா ).  குழந்தையின் பெயர் ஹர்ஷவர்தன் . 

அண்மையில் காளமேகம், ஒளவையார் போன்றோரின் பாடல்களைப் படித்துக் கொண்டிருந்தமையால் அதனால் தாக்குண்டு சிலேடை வடிவில் இந்த நிகழ்வு குறித்து  மூன்று பாடல்களை எழுதியிருக்கிறேன். 

இலக்கணத்தை கடைப்பிடிக்கவில்லை. மனதில் தோன்றியதை உடனே எழுதி விட்டேன் . 


பாடல் 1 : மாமாவுக்கு  அழைப்பு

அம்மாவைப் போலிருக்கும் அம்மாவும் எனை அழைத்து 
தம்மாவைப் பார்ப்பதற்கு இம்மாவைக் கூப்பிட்டாள் 
எம்மாவை மறந்தாலும் அம்மாவைப் பார்ப்பதற்கு
சும்மாவே நில்லாமல் இம்மாவும் ஓடி வந்தான் 

--> 
அம்மாவைப் போலிருக்கும் - அந்த மாங்கனியைப் போலிருக்கும் , அம்மாவும் எனை அழைத்து   - அம்மாவாகியிருக்கும் என் தங்கை எனை அழைத்து ,  தம்மாவைப் பார்ப்பதற்கு -  மாங்கனி போலிருக்கும் தன குழந்தையைப் பார்ப்பதற்கு , இம்மாவைக் கூப்பிட்டாள் - இந்த மாமாவை(தாய்மாமா) கூப்பிட்டாள்.

பாடல் 2 : தாயும் சேயும் 

மதுவிலே பிறந்து மதுவால் வளர்ந்து 
மதுவுக்கே துடித்து மதுவையே நினைத்து 
மது விலக்கிலாமல் மதுவைக் காப்பாய் 
மதுவோடு இருக்கும் மதுவரசே 


--> 
குழந்தையைப் பார்த்துப் பாடுவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது. என் தங்கையின் பெயர் மதுவந்தி என்பதால் மது என்ற பெயர் கொண்டு இந்தப் பாடல் எழுதப்பட்டிருக்கிறது. குழந்தையின் பெயர் ஹர்ஷா என்பதால் அதைத் தமிழில் இங்கு குறிக்க மதுவரசே என்று எழுதியிருக்கிறேன். 

பாடல் 3 : தந்தையும் மகனும் 

நித்தனை மறந்தாலும் நித்தினை மறக்காமல்
நித்தனே நித்தினென்று நித்தினே நித்தனென்று 
நித்தமும் நித்தினை நீங்காமல் நீ நினைப்பாய்  - கடல்
நீத்தம் பார்க்காத நித்திலமே 


--->  நித்தன் என்றால் கடவுள். நித்தின் என்பது என் தங்கை கணவனின் பெயர்.

Sunday, June 10, 2012

ஒன்றும் ஓராயிரமும்



                         ,
ஒரு பிரதான
சாலை போல்
இருந்தது அந்த
இடம் ;

ஆனால், அதில்
ஓர் அதிசயம் ;

பச்சை, மஞ்சள், சிகப்பு  
என பூமாலைகளை
சமிக்ஞை விளக்குகளாய்
வைத்திருந்தனர் மக்கள் ;

வழக்கம் போல்
அதை யாரும்
மதிக்கவே இல்லை, 
மிதிக்கவே செய்தனர் ;

காணும் இடமெங்கும் 
ஆயிரம் தலைகள் ;
ஆயிரம் தலைகளிடமும் 
ஆயிரம் கலைகள் ;

ஆமை போல் 
நகர்ந்தனர் சிலர் ;
சிறுத்தை போல் 
சீறினர் சிலர் ;

அவரவர் வாயொலிகளை
வைத்தே ஹாரன்களை
எழுப்பினர் பலர் ;

வண்டி அடித்துக் 
கொண்டு யாரும் முன்னேறவில்லை 
முண்டி அடித்துக் 
கொண்டே எல்லாரும் முன்னேறினர் ;

அங்கே 
காவல் இல்லாததால்
ஆவல் மிகுந்தது மக்களுக்கு ;

காணக் காண 
விழியைப்  பிதுங்க 
வைத்தது நெரிசல் ;

முன்னால் சென்றவர்கள் 
பின்னால் வந்தார்கள் ;
பின்னால்  சென்றவர்கள் 
முன்னால் வந்தார்கள் ;

இப்படியே 
சுழற்சி முறையில்
நடந்தது அந்த 
சாலை போக்குவரத்து ;

எனினும் -
எதையுமே அறியாமல் 
அங்கே பிணமாகத்
தூங்கிக் கொண்டிருந்தார் 

இவை எல்லாவற்றுக்கும் 
காரணமான ஒருவர் ; 

Saturday, March 31, 2012

இரவு

இரவே !!
நீண்டு படுத்திருக்கும்
கரிய அரவே !!

நீ எங்கிருந்து வருகிறாய் ?

பகலெனும் புற்றுக்குள்ளிருந்து
வருகிறாயா ?

ஊர் முழுதும்
ஊர்ந்து ஊர்ந்து
போகிறாயே !!

எங்கே ?

போகும் வழியில்
நீ உமிழும்
மாணிக்கம் தான்
மீன்களாய் சுடர்கின்றனவோ ?

ஆளரவம் இல்லாத
நேரத்தில் ஒரு
நீளரவம் போல்
வருகிறாயே !!

எனக்குத் தெரியும்
அதெதற்கு என்று ;

பாவம் - உனக்குப்
பசிக்கிறது ;

அசுரப் பசி ;

பேதாபேதமின்றி எல்லோரையும்
அப்படியே விழுங்குகிறாயே ?
ஏன் ?

புரிகிறது எனக்கு ;

பாம்புகள் எல்லாம்
விழுங்கித் தானே
உண்ண வேண்டும் ;

பூமியில் உள்ள
"நல்" பாம்பு கடிக்கும் ;
வானிலே உள்ள
"அல்" பாம்பு விழுங்கும் ;

நீ
எல்லாவற்றையும் விழுங்குகிறாய்
வெளிச்சம் தவிர ...

ம்ம்ம்....

உனக்கு அது
ஒவ்வாதோ ?

உண்மை தான் .....

வெளிச்சம் வந்தால்
நீ மறைந்து போகிறாய் ;
அழிந்து போவதில்லை ;

நெருப்போடு சேர்ந்த எதுவும்
நெருப்பாவது போல்
உன்னோடு சேர்ந்த எதுவும்
கருப்பாகி விடுகிறதே !!
கருப்பாகி உன்னில் ஒரு
உறுப்பாகி விடுகிறதே ;

இருட்டில் நடக்கையில்
குழியும் ஒன்று தான்
மூடியும் ஒன்று தான்
எறும்பும் ஒன்று தான்
பாம்பும் ஒன்று தான்
யானையும் ஒன்று தான்
பூனையும் ஒன்று தான்
அரசனும் ஒன்று தான்
ஆண்டியும் ஒன்று தான்...

எங்கும் கருப்பு , எதிலும் கருப்பு
அடடா என்ன விந்தை இது !!

இதை உணரவைத்த
இராவே !!
முற்றும் அறிந்த ஞானி நீ ;

ஞாயிறு ஒருப்பெருஞ்ஜோதி,
நீ கருப்பெருஞ்ஜோதி ;

ஆனால் ஒரு ஆச்சரியம்.....
இந்த ஜோதி
யாவரையும் குருடாக்கி விடுகிறதே !!

நீ வந்தால்
குன்றிமணி ஒளியின்றி
இரண்டடி முன்னால்
எடுத்து வைக்க ஏலுமா ?

உன்னைக் கண்டால்
எவர்க்கும் பயம் ;

பூமியில் உள்ள
கறுப்பினத்தைக் கண்டு மக்கள்
ஒடுக்குவர் ;

வானத்தில் உள்ள
கறுப்பினத்தைக் கண்டு மக்கள்
ஒடுங்குவர் ;

வெண்ணிற மேகமும் உன்னருகே
மைந்நிற மேகமாய்த் தெரிகிறதே ;

உனக்குள்ளும் ஒளி உண்டோ ?

பகலின் பல சத்தங்கள்
உனக்குள் அடங்கி விடுகிறதே !!

பல மொழிகள்
தெரிந்த மௌனி நீ ;

பகலுக்கு பகலவன் தேவை ;
உனக்கு நிலவு தேவையா ?
இல்லை ;

ஆரையும் சாரா அம்சமே
உன் சாராம்சம் ;

நீ திரளத் திரள
உலகம் சொக்குண்டு துயில்கிறதே ;

ஆதலால் ஒரு
மந்திரவாதி நீ ;

தேவன்
மனிதனைப் படைக்கையில்
உன்னையும் கேட்டுத்தான்
படைத்து முடித்தானோ ?

எது எப்படியோ...

என் கேள்விகள்
நீண்டு கொண்டே இருக்கும்
உன்னைப் போலவே !!

பதில் தேவையில்லை,
கேள்வி கேட்கும்
சந்தோஷமே போதும் ;

இரவே !! இப்போது
நான் விடை பெறுகிறேன் ;

மீண்டும் சந்திக்கிறேன்
உன்னைக் "கேள்விகளோடு" மட்டும் ;